பிரபல கிரைம் நாவலாசிரியரின் மகன் வெற்றி, தனது தந்தை பற்றிய வரலாற்றை எழுத, ஒரு பத்திரிகை நிறுவனம் அழைத்ததால் சென்னைக்கு வருகிறார். அப்பகுதியில் சில குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. அந்த கொலைகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். வெற்றி தனது புலனாய்வு திறமையை பயன்படுத்தி, போலீசாருக்கு உதவுகிறார். அப்போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அது என்ன என்பது மீதி கதை.
முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார், அனீஸ் அஷ்ரஃப். கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்து, ரசிகர்களை பதற வைத்திருக்கிறார் வெற்றி. தம்பி ராமய்யா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். ஷில்பா மஞ்சுநாத்துக்கு அதிக வேலையில்லை. ரெடின் கிங்ஸ்லி காமெடி செய்திருக்கிறார். சைக்கோ வில்லனாக வரும் மகேஸ் தாஸ் கொடூரமாக நடித்துள்ளார்.
அரவிந்த் ஒளிப்பதிவும், ஏஜேஆரின் பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவியுள்ளன. கொலைகளுக்கான சஸ்பென்ஸ் நீடித்தாலும், போலீசாரை காமெடியாகவே சிந்திக்க வைத்திருப்பதும், வெற்றியின் புலனாய்வு திறமை ஒரேமாதிரி இருப்பதும் பலவீனம். காட்சிகளில் இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
