25-11-2022 - வெள்ளிக்கிழமை
கௌரி என்பது பார்வதியைக் குறிக்கும். வெண்மையும் தூய்மையையும் குறிக்கும். தூய்மையான மனதோடு பார்வதி தேவியை பரமசிவனுடன் இணைத்து வணங்க வேண்டிய கௌரி விரத நாட்கள் ஒரு வருடத்தில் பல உண்டு. ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒரு பெயர். உதாரணமாக கதலி கௌரி என்று சொன்னால் வாழை மரத்தடியில் பார்வதி பரமேஸ்வரர்களை வணங்க வேண்டிய விரதம். அதுபோல் இந்த நாளில் வருவது திந்திரிணி கௌரி விரதம்.
திந்திரிணி என்பது புளியைக் குறிக்கும். புளிய மரத்தடியில் கௌரி பரமேஸ்வரர் படத்தை ஆவாகனம் செய்து, பூக்களைச் சூட்டி, தூப தீபங்கள் காட்டி, பூஜை செய்ய வேண்டிய நாளாக முன்னோர்கள் இந்த நாளை சொல்லி இருக்கின்றார்கள். இன்றைக்குச் செய்ய வேண்டிய நிவேதனமும் புளிப்புச் சுவை உடையதாக இருக்க வேண்டும்.
முக்கியமாக புளிச்சோறு அதாவது புளியோதரை இன்றைய நிவேதனத்தில் முக்கிய பங்காக இருக்க வேண்டும். இந்த விரதத்தினால் தம்பதிகளின் ஒற்றுமை அன்யோன்யம் ஓங்கும். குடும்பத்தில் பிரிவு ஏற்படாது. குடும்ப ஒற்றுமையும் குதூகலமும் சிறக்கும். பொதுவாக சுக்கிரன் சில ஜாதகங்களில் கன்னி ராசியில் நீசம் அடைந்திருப்பார்.
பலமிழந்து அல்லது வேறு ஏதாவது ஒரு ராசியில் பாவ கிரகங்களோடு இணைந்து இருப்பார். அப்படி அமைந்த ஜாதகங்களுக்கு சுபத் தடைகள் இருக்கும். திருமணத் தடைகள் முதலிய தோஷங்கள் நிற்கும். அந்த தோஷங்கள் விலக இன்றைய திந்திரிணி கௌரி விரதத்தைச் செய்யலாம் என்று பெரியவர்கள் சொல்லி
இருக்கிறார்கள்.