×

திருக்கோடிகாவல்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

யமனின் அதிகாரம் செயல்படாத நகரம் காசி, திருக்கோடிகாவல் (திருவாவடுதுறை அருகில்). இத்தலத்தில் வாழ்பவருக்கு யமவாதனை இல்லையென்றும், யமன், இவர்களை தண்டிப்பதில்லை, ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்றும் குறித்துள்ளனர். தீர்த்தம் யமதீர்த்தம், இவ்வூரில் மயானம் இல்லை. இறப்பவர்களை காவிரி எதிர்கரைக்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்கிறார்கள். மார்க்கண்டேயர் சிரஞ்சீவி பட்டம் பெற்ற நாள்பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் மிதுன லக்னம் சுக்கிரனும், குருவும் உச்சம்பெற்ற நல்ல வேளை, மிருகண்டு முனிவர்க்கும், மருத்துவதிக்கும் மகனாக பிறந்தார் மார்க்கண்டேயர். அவருக்கு ஈசன் அர்த்தநாரீஸ்வரராக திருவிடை மருதூரில் காட்சி தந்தார். அவர் திருநீலக்குடியில் தவம் செய்த போது, ஈசன் ஏழு வடிவங்களாக காட்சி தந்தார். திருமழபாடியில் சிவன் மழுவெடுத்து நடனமாடியதை மார்க்கண்டேயர் கண்டு மகிழ்ந்தார்.

கிருத்திவாசர்

யானை வயிற்றில் நீண்டநேரம் வசித்ததால் ஈசன் ‘கிருத்திவாசர்’ என்றழைக்கப்பட்டார். யானையின் ஈரத்தோல் கடும் வெப்பமும் விஷமும் கொண்டது. அதைச் சிறிது நேரம் போர்த்திக் கொண்டிருந்தாலும் அப்படிச் செய்பவன் மரணமடைவான். சிவன் பேராற்றல் படைத்தவராதலின் அத்தோலால் தன்னைப் போர்த்துக்கொண்டு இருந்ததுடன் ஈசன் கஜசங்கார
தாண்டவம் ஆடினார்.

பஞ்சவில்வம்

சிவபெருமானை பூஜிக்க தகுந்த இலைகளுள் தலையானது வில்வமாகும். இவை கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை என ஐந்தாகும். பஞ்சமுக அர்ச்சனையின் போது, இந்த இலைகளாலும் சிவனை அர்ச்சனை செய்ய வேண்டும். காசியில் விஸ்வநாதர்க்கு சப்தரிஷி பூஜையில் வில்வ இலையில் சந்தனத்தில், இராமர் என்று எழுதி இலைகளை விஸ்வனாதருக்கு சாத்துவார்கள்.

கஜசம்ஹாரம்

கஜசம்ஹாரம் என்பது உண்மையில் உயிர்களுக்கு, அறியாமையால் விளையும் துன்பங்களை நீக்கி அறிவை விளக்கி மேன்மைபெற வைக்கும் ஓயாது நடைபெறும் நிகழ்ச்சி. அஞ்சுகின்ற உயிர்களுக்கு இடையில் ஞானாசிரியன் வீற்றிருந்து அவைகளுக்கு இறைவனின் மேன்மையை உணர்த்தி, மோட்சத்திற்கு உயர்த்துகின்றான் என்பதையே சக்தியின் வடிவமும், அவளுடைய இடையில் அமர்ந்துள்ள குமாரனின் வடிவமும் உணர்த்துகின்றன.

ஹரிவிரிஞ்ச தாரண பராக்கிரம வடிவம்

காஞ்சி காயா ரோகணத்தில் சிவனே பிரம்ம விஷ்ணுக்களை ஊழிக்காலத்தில் தமது தோளில் தாங்கிப் பிறகு விடுவித்தார் என்கிறது தலபுராணம். அவர்களைத் தமது காயத்தில் (உடலில்) ஆரோகணம் செய்து கொண்டதால் சிவன், காயரோகணர் என்பர். இங்கு கருவறைச் சுவரில் சிவலிங்கத்திற்குப் பின்னால் சோமாஸ்கந்தர் வலது தோளுக்கு மேலே பிரம்மனும், இடது தோளுக்கு மேலே திருமாலும் அமைந்துள்ளனர்.

அஷ்டமங்கலம்

சிவன் உமாதேவியுடனும், கணங்களுடன் கொலு வீற்றிருக்கும் மகாகயிலாயத்தின் திருமாளிகை வாயில்களில் உள்ளது.

8 திசைகளில் இருந்தும் சிவனின் மேன்மையைப் போற்றி அளிக்கப்பட்ட மிக உயர்ந்த மங்கலப்பொருட்கள்

1) இந்திரன் - இந்திரத்துவஜம் என்றகொடி
2) அக்னி - 1000 சுடர் அடுக்குதீபம்
3) யமன் - சுவஸ்திக்
4) நீருதி - கண்ணாடி
5) வருணன் - சங்கு
 6) வாயு - இரட்டைச்சாமரங்கள்
7) குபேரன் - ஸ்ரீவத்ஸம்
8) ஈசானன் - பூரணகும்பம் இவைகளை தேவபெண்கள் ஏந்துகின்றனர்.

அட்சர வடிவதேவி

அட்சரத்தில் ஒலிவடிவமாக பராசக்தி உள்ளாள். உலகமொழிகளுக்கு ஆதாரமாக விளங்கும் 51 அட்சரங்களும் தனித்தனியே வண்ணம், வடிவம் கொண்ட தேவியர்களாக விளங்குகின்றன. இந்த பெண் தேவதைகள் மாத்ருகா தேவியர் எழுந்தருளியுள்ள பீடம் அட்சரபீடம் அல்லது மாத்ருகா பீடம் என்பர். இது திருவாரூரில் உள்ளது. கமலாம்பிகை சந்நதி பிராகாரத்தின் தென்மேற்கு முனையில், அட்சரபீடம் உள்ளது. இங்குள்ள பிரபாவளியில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

Tags :
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்