×

அறிந்த தலம் அறியாத தகவல்கள் :பிள்ளையார்பட்டி

பிள்ளையார் சுழி உண்மை

எதைச் செய்தாலும் பிள்ளையாரை வணங்கி விட்டுத் தொடங்குவது மரபு. எழுதும்போது கூடப் பிள்ளையார் சுழி போட்டு விட்டுப் பிறகு எழுதுவதே நமது வழக்கம். இது ஏன்? பிள்ளையார் சுழி போடும் போது, `உ’ என்பது போலப் போடக்கூடாது. `உ’ என்பதில் உள்ள கழுத்து இல்லாதவாறு போட வேண்டும். பிள்ளையார் சுழியில், ஒரு முழு வட்டம், ஒரு அரை வட்டம், ஒரு நேர் கோடு - என மூன்றும் இணைந்திருப்பதைக் காணலாம். உலகில் உள்ள எந்தவொரு மொழியின் எழுத்தாக இருந்தாலும், இந்த முழு வட்டம், அரை வட்டம், நேர்கோடு எனும் இந்த மூன்றும் இல்லாமல் இருக்காது. விநாயகரும் அப்படித்தான். விலங்கு, ஆண், பெண், பூதங்கள் என அனைத்தும் இணைந்த ஒரே வடிவம்.
இதன் காரணமாகவே, மொழியைத் தெய்வமாகக் கொண்டாடும் நாம், மொழியையும் விநாயகரையும் இணைத்துப் `பிள்ளையார் சுழி’ எனப் போடுகிறோம். ‘‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என வள்ளுவர், தெய்வத்தையும் மொழியையும் இணைத்தே சொல்லி ஆரம்பித்திருப்பதைப் பார்த்தால் உண்மை விளங்கும்.
கற்பகத்தின்

வறுமை தீர்க்கும் கற்பக விநாயகர்

கற்பக விருட்சம், நாம் கேட்டதை எல்லாம் கொடுக்கும். அதுபோல, பிள்ளையார் பட்டியில் எழுந்தருளி இருக்கும் கற்பக விநாயகரும், நாம் கேட்பதை எல்லாம் அருளுவார். சொல்லப்போனால், கற்பக விருட்சத்தை விட மேலானவர் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர். இதை விளக்கும் பாடல்;
 முற்பவத்தில் யான் புரிந்த தீவினைகள்
முழுதகற்றும் முகத்தினானை
அற்ப சுகத்து எனை அழுத்தா ஐங்கரனைப்
பிற்பவமும் அகற்றும் கோவைச்
சொற்பழுது புரியாத வணிகர் குலம்
தினம் பணியும் துணைத் தாளானைக்
கற்பகத்தின் மிடி அகற்றும் கற்பகமாம்
விநாயகனைக் கருத்தில் வைப்பாம்
(திருக்கோவிலூர் ஆண்டவர்)

கற்பக விருட்சத்தின் வறுமையையும் தீர்க்கக் கூடியவர், இங்கு எழுந்தருளி இருக்கும் கற்பக விநாயகர். அப்படிப் பட்டவரைக் கருத்துள்வைத்தால், துயர் ஏது? எனும் இப்பாடலை எழுதியவர் திருக்கோவிலூர் ஆண்டவர். இவர் சிவபெருமானையும், அம்பாளையும் ரிஷபத்தின் மீது நேருக்குநேராகத் தரிசித்தவர். எண்ணிலடங்கா தெய்விக அனுபவங்கள்.
கை வரப் பெற்றவர். தெய்வமாகவே மதிக்கப்பட்டு உலா வந்தவர் `திருக்கோவிலூர் ஆண்டவர்’ எனும் மகான். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இப்படிப்பட்ட அவதார புருஷர் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகரைத் தரிசித்தபோது பாடிய பாடல்தான் மேலே உள்ளது. அதில் உள்ளதைப்போல, `கற்பக விநாயகரை’ நினைத்துக் கருத்தோடு சொல்வோம்! கவலைகள் தீரும்!

வடக்கு நோக்கிய வலஞ்சுழி

ஆறடி உயரமுள்ள கற்பக விநாயகர் வடக்குநோக்கி, தும்பிக்கையை வலது பக்கமாகச் சுழித்தவாறு (வலம்புரி விநாயகராக) எழுந்தருளி உள்ளார்.

தெய்வத்தின் கையில் தெய்வம்

கற்பக விநாயகரின் வலது திருக்கரத்தில், ஒரு சிவலிங்கம் உள்ளது.

கல்வெட்டு

ஏராளமான கல்வெட்டுக்கள் கொண்ட ஆலயம் இது. இங்கே கிடைத்திருக்கும் கல்வெட்டுக் களின்படி, இங்கே எழுந்தருளியிருக்கும் கற்பக விநாயகர், நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பது, ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

அமர்ந்த நிலையில் ஆதிக்க நாயகர்கள்

கற்பக விநாயகரின் திருமேனியில் நவக்கிரகங்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பது மரபு. அதாவது, கற்பக விநாயகரின் பக்தர்களுக்கு, நவக்கிரகங்களால் உண்டாகும் துன்பங்கள் விலகும் என்பது பொருள். அதை நிரூபிப்பதுபோல, மற்ற ஆலயங்களில் நின்ற வண்ணமாகக் காட்சி தரும் நவக்கிரகங்கள், இங்கே என்னவோ சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதைப்போல, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருவது, இங்குள்ள தனிச்சிறப்பு. கிரக தோஷங்களை நீக்கும் திருக்கோயில் இது.

பெயர்கள் பல

தென்மருதூர், கணேசபுரம், மருதாங்கூர், கணேச மாநகர், பிள்ளை நகர், திருவீங்கைச்வரம், ராசநாராயணபுரம், திருவீங்கைக்குடி, மருதங்குடி, எருக்காட்டூர் எனும் எண்ணெற்ற பெயர்களும் பிள்ளையார் பட்டிக்கு உண்டான பெயர்கள்.

கல்யாண காத்யாயனி

செல்வ வசதி, அழகு, படிப்பு, பதவி எனப் பலவும் இருந்தாலும், திருமணம் நடக்காத குறை பலருக்கும் உண்டு. அக்குறையைத் தீர்க்கும் தனிப்பெரும் தேவியான அன்னை `காத்யாயனி’ இங்கே எழுந்தருளி இருக்கிறார். இந்த அன்னையை வேண்டி, நல்ல முறையில் திருமணம் நடந்தவர்கள், கல்யாணம் ஆனவுடன் இங்கு வந்து, தம்பதி சமேதராகத் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது, இன்றும் நடக்கிறது இங்கே. திருமணத் தடை நீக்கி, நல்ல முறையில் திருமணம் நடக்க அருள் புரியும் திருத்தலம் இது.

பிள்ளைப்பேறு அருளும் பெருங்கோயில்

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, இங்கே எழுந்தருளியிருக்கும் நாகலிங்கேஸ்வரரான சிவபெருமானைப் பிரார்த்தித்து வழிபாடு செய்தால், பிள்ளைப்பேறு உண்டாகும். அவ்வாறு பிரார்த்தித்துப் பிள்ளையைப் பெற்றவுடன், அக்குழந்தையுடன் வந்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்களை இன்றும் காணலாம்.

ஆகமங்களும் ஆலயங்களும்  அயல் நாடுகளும்

12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இத்திருக்கோயில், நகரத்தார் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது. அற்புதமான முறையில் ஆகம விதிப்படி ஆலய வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும், ஆலயத்தின் அருகிலேயே ஆகம பாடசாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு, ஆகமம் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளம். இங்கு ஆகமம் பயின்ற மாணவர்கள் பலர், பற்பல ஆலயங்களில் பணி புரிகிறார்கள். அயல் நாடுகள் உட்பட ஆலய கும்பாபிஷேகம் என்றால், இங்கு பயின்ற மாணவர்கள், அந்த கும்பாபிஷேகங்களை நல்ல முறையில் நடத்துவது பிள்ளையார்பட்டிக்கே உள்ள பெருஞ்சிறப்பு.

Tags : Pillaiyarpatti ,
× RELATED இந்த வார விசேஷங்கள்