×

உள்ளத்தை கவரும் மார்கழி திங்கள்


மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதியான குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசனாகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் தேந்தெடுத்தார்கள்  நம் முன்னோர்கள். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி வழியில்  என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண்டும்.

அவசியஅரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் மார்கழி மாதமே. அதே போன்று ராம நாமத்தை  தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில் தான். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி யாக நாம்  கொண்டாடுகிறோம். வைணவர்கள் மட்டும் அல்லாமல் இந்துக்கள் அனைவருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி. யாகும். அந்த நன்னாளில் அதிகாலையில்  ஆலயங்களில் பரம பத  சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் பெருமாளை தரிசிப் பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்பது நம்பிக்கை உண்டு.

இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய சிறந்த  மாதமாக மார்கழியை வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.நமது சொந்தக் காரியங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்து, இந்த ஒரு மாதமாவது இறைவன்  மேல் நாம்  முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்திக்கு  வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது.

மார்கழி வந்தால். நம் உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்கும் பழக்கம் நம்  நிறைய பேருக்கு உண்டு . ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசலில் தண்ணீர்  தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

என்ன விசேஷம் மார்கழி மாதத்தில்?

‘மார்கழியில விரதம் இருந்தா நம்  மனசு இக்கு பிடித்தமான  கணவன்  கிடைப்பான்’ என்கிறார்களே... மார்கழிக்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? நகரங்களில் பல இடங்களில்  காண முடியவில்லை எனினும் இன்றும் சில  ஊர்களிலும், கிராமங்களிலும் மார்கழிக் கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையாரும், அதன் மேல் பூக்களையும் வைப்பது எதனால்?
இப்படி  நமக்கு   பல சந்தேகங்கள்  உண்டு.மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடும் வழிபாட்டு முறை வகுக்கப்பட்டதன் காரணம் என்ன?

‘‘ஆடியில் அம்பாலுக்கும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு கடவுள் என்று வழி வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். என்ன காரணம் என்றால், ஆடியில் பலமாக  காற்று வீசும். அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால், மக்கள் தங்கள் இல்லங்களை  விட்டு வெளியே வந்து அம்மன் கோயில்களில் உள்ள கிருமி நாசினியான வேப்பிலையின் மணத்தை சுவாசிக்கும் போது, விஷக்காற்று முறியடிக்கப்படுவதால் , இயற்கையான ஆக்சிஜனும்  நமக்கு கிடைக்கிறது.

புரட்டாசி  என்பது மழைக்காலம் , மக்கள் தங்கள் இல்லங்களிலேயே  கிடைக்கும் சத்தான  காய்கறிகளைப் படைத்து பெருமாளை வழிபடுகிறார்கள். இம்மாதத்தில் காய்கறிகளின் சத்தும், துளசி தீர்த்தமும் நம் உடலுக்குத் தேவையான நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓஸோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம்
பூமியில் இறங்கும். இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என்று  முன்னோர்கள் கூறினர்.
நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும்.

தீய  பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை இறைவனின்  பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
பெண்களை ஏன் எல்லா விரதங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்?

நம் சாஸ்திரங்களும் வேதங்களும். பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில் வைத்துள்ளது.  பெண் என்பவள் 6 விதமான தன்மைகளைக் கொண்டவள். அவளே தெய்வம் , மனைவி, குரு, நண்பன் , ஆசான், போதகன்  (செயல்திறன்) என்று ஒரு ஆணுக்கு அமைகின்றாள். அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் அந்த  குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். இதனால்தான்  பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.’’

அதிகாலையில் கோலமிடுவதன் ஏன்?

பூலோகத்தில் எந்த மனிதரும் தவறுகள் செய்யாமலில்லை. அறிந்தும்  , அறியாமல் செய்யும் தவறுகள். நடக்கும் போது நம் கால் பாதம் பட்டு  எறும்பு, பூச்சி போன்ற பல  உயிர்கள் இறக்கின்றன ? இதுவும் ஒருவகை பாவம்தானே? இதனால் ஏற்படும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத் தடை வரும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால்  அழகிய வண்ண கோலம் போடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. மழையினால் உணவுக்கு வழியில்லாமல்  இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும்.  அப்படி அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு, தோஷங்கள்
அகலுவதாக நம்பப்படுகிறது மார்கழிக் மாதத்தில் மட்டும் கோலத்தில் சாணம் வைப்பது ஏன்?

‘‘பசு மாட்டின் சாணம் பல பலன்களைத் தரும் ஒப்பற்ற கிருமிநாசினி என்பது உலகளவில் பல அறிவியல் வல்லுநர்களும் ஒப்புக்கொண்ட உண்மை. நம் இல்லத்தை சுற்றிப் பரவியிருக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி உடையது  சாணத்திற்கு உண்டு. நம் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்கள்.’’
சாணத்தின் மேல் ஏன்  பூ வைக்க வேண்டும் ?

‘‘சாணத்தின் மீது வைக்கும் பூக்களின் தேனை உறிஞ்சுவதற்காக வரும் தேனீக்களுக்கு உணவு கிடைப்பது மட்டுமின்றி, சாணத்தின் பயனால் அந்தத் தேனீயின் விஷமும் எடுக்கப்படுகிறது.
இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நல்ல விஷயங்களை அடக்கிய மார்கழி மாதக் கோலங்களால் பெண்களின் கற்பனைத் திறன் வளர்வதுடன். ஒருமுக சிந்தனை ஏற்பட்டு அறிவும்
கூர்மையாகும்.’’

பாவை நோன்பு என்றால் என்ன?

பண்டைய  காலத்தில் ஆண்டாள் இந்த மார்கழி மாதத்தில் தினம் ஒரு பாசுரமாகப் பாடிச் சென்று, தான்  மட்டும் பெருமாளைப் பார்த்து பலன் அடையக் கூடாது என்றும், தன் தெருவிலிருந்த கன்னிப் பெண்களும், குழந்தை இல்லாதவர்களையும்  தன்னோட அழைத்துச் சென்று, தன் மனம் கவர்ந்த கண்ணனின் முன் நின்று  ‘நீயே என் கணவனாக வர வேண்டும்’ என்று வழிபடுகிறாள். அதோடு ஆண்டாளுடன் சென்ற பெண்களும் கண்ணனுடன் ஐக்கியமாகி தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.

அதிகாலை எழுந்து நல்ல மனதுடன் தனக்குச் சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்றும் நம்பிக்கையுடன், நல்ல காற்றை சுவாசித்து விரதம் மேற்கொள்ளும்போது அப்பெண்ணிடமிருந்த தீய எண்ணங்கள் விலகி, மன ஆரோக்கியம் ஏற்பட்டு  அவள் நினைத்த  மாதிரி நல்ல கணவனை அடைய வழி கிடைக்கும்.

குடந்தை நடேசன்

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்