×

மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா?

மார்கழி  மாதத்தை, “பீடை” மாதம் எனத் தவறாகச் சொல்லப்படுகிறது.  இதனைக் காரணங்காட்டியே, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அறவே தவிர்க்கப்படுகிறது. “மாதங்களில் நான் மார்கழி!” என்று திருவாய்மலர்ந்தருளிய கண்ணனுடைய மாதமாகத் திகழும் மார்கழியில் இறைவனை மனத்தினால் நினைத்து  பக்தி சிரத்தையுடன் பூஜிக்க வேண்டும்; இம்மாதத்தில் செய்யப்படும் ஜப தபங்களும், பூஜைகளும் மிக உயர்ந்த பலன்களை அளிக்கவல்லவை; இறைவனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கவும் மட்டுமே அமைந்துள்ளதனால் கேளிக்கை நிகழ்ச்சிகள் இம்மாதம் தவிர்க்கப்படுகின்றன. மார்கழி, பீடை மாதமல்ல; பீடு மாதம்!

தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும்.

தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும்.இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப்பொழுது, மார்கழி மாதமாகின்றது. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்