×

ஐயப்பன் தலங்கள்

திருச்சி நீதி மன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப் படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன.

சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.

சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய்மூடி நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சிபுரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணி பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என
போற்றப்படுகிறார்.
 
கையில் பூச்செண்டுடனும், இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணூல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

சபரிமலையில் ஐயப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும், ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.

விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள்
கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.

திருவையாறு&திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன்விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டுவிட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும்,
விநாயகப்பெருமானும் அருள்கிறார்கள்.

பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.

ஈசன் பவனி வரும் திருவழகை உலாவாக்கினான் சேரமான் பெருமான். அதை பூவுலகிற்கு தெரியப்படுத்த அந்த ஏட்டுக்கட்டினை ஏந்திய ஐயனை அரங்கேற்றிய ஐயனார் எனும் பெயரில் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் பாதையில் உள்ள  பிடவூரில் தரிசிக்கலாம்.

தென்காசி அருகே குற்றாலத்தில் நான்கு திசைகளிலும் ஐயன் அருள்புரிகிறார். இதில் மேலவாசல் தர்மசாஸ்தா, பல குடும்பங்களுக்கு குலதெய்வமாய் அருள்புரிகிறார். பீட வடிவில் அருவமாக ஐயன் இங்கு அருள்வது சிறப்பு.

 திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி அருகே, ஏரிக்கரை ஓரத்தில் கர்ப்பிணி ஒருத்திக்கு கையில் விளக்கொளியுடன் சடைமுடியுடன் வந்து பிரசவம் பார்த்த ஐயன், பாலக வடிவில் நின்ற கோலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

சேங்காலிபுரம் அருகே எருமைத்தலை கிராமத்தில் மாவிலங்கை மரத்தடியில் யானை மீதமர்ந்த கம்பீரமான சாஸ்தாவை தரிசிக்கலாம்.

நெல்லை, பாளையங்கோட்டை, சாந்திநகரில் சங்குகர்ணன் எனும் அரக்கனை அழித்த சண்பகாரண்ய சாஸ்தா எனும் மத்யாரண்யேஸ்வர சாஸ்தாவை தரிசிக்கலாம்.

மயிலாடுதுறை, வஸ்த்ரராஜபுரம் எனும் இடத்தில் தேவியரை அணைத்தபடி காட்சிதரும் ஐயனை தரிசிக்கலாம். இங்கு நாகம் ஒன்று ஐயனுக்கு காவலாக உள்ளதால் இவர் நாகசாஸ்தா என்றும் வணங்கப்படுகிறார்.

தஞ்சை, மெலட்டூர் அருகே சுரைக்காயூரில் ஐயன் தன் தேவியுடன் அருள்கிறார். வருடா வருடம் மெலட்டூரில் நடக்கும் பாகவதமேளாவில் ஹரிஹரபுத்ர ஜனனம் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.
 - ஜெயலட்சுமி

Tags :
× RELATED சுந்தர வேடம்