×

சிவ மணம் கமழும் மகிழம்பூ

தமிழ்ப் பெண் புலவர் ஒளவைபிராட்டியார்  பெரிய மடல்களைக் கொண்ட தாழம்பூவையும் மிகச் சிறிய இதழ்களைக் கொண்ட மகிழம்பூவையும் உவமைப்படுத்தி
“மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்”
- என்ற பாடலில், தாழம்பூ பெரிய மடலாக பூத்திருக்கும் அதன் மணத்தை எல்லோரும் விரும்புவதில்லை, மகிழம்பூ அளவில் சிறிதாக இருந்தாலும் இதன் மணம் நெடுந்தொலைவு மணக்கும், மணத்தை எல்லோரும் விரும்புவர் என்கிறார்.

ஆனால், தாழம்பூவில் நல்ல நறுமணம் இருக்கும். சிவனைத் தவிர மற்ற அனைத்து கடவுளுக்கும் வழிபாட்டுக்கு உதவுகிறது. எனவே, தாழம்பூவிற்கு எதிராக மகிழம்பூவை கூறுவது பொருந்தாமல் உள்ளது. தாழை என்பது தென்னையையும் குறிக்கும். தென்னை மடல் பெரிதாயிருப்பினும் அதற்குச் சிறிதும் மணமில்லை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். இனி, மகிழம்பூ மரத்திற்கும் ஆன்மிகத்திற்கும் உள்ளத் தொடர்பைப் பார்ப்போம்.மகிழம் ”வகுளம்” என்ற தமிழ்ச்சொல்லை மருவி வந்தது. பச்சை வான்வெளி போன்ற மரத்தில் லேசான வெண்ணிறத்தில் சின்னஞ்சிறு நட்சத்திரங்களாக பூத்திருக்கும் இப்பூக்கள் கண்ணுக்கும் நாசிக்கும் ஒருசேர இன்பமளிக்கின்றன. சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் வகுளம் என குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரணமாக மலர்களின் ஆயுள் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோதான். ஆனால், மகிழம்பூ பதினைந்து முதல் இருபது நாட்கள் வரை மணம் குறையாமல் உயிர் வாழும் தன்மை படைத்தது.

பெண்கள் விரும்பி சூடும் மகிழம்பூ காயக் காய மணம் கூடுமே தவிர குறையாது. அம்பிகைக்கு ஆரமாகச் சூட்டினால் கோடிப் புண்ணியம். அம்பாளுக்குப் பாவாடையாகச் சாத்தலாம். மகிழம்பூ பாவாடை சாத்தினால் கோயிலின் நாற்புறமும் நறுமணம் மணக்கும். தமிழ் நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியிலிருந்து வடகாடு செல்லும் வழியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகிழ மரம் ஒன்று உள்ளது. இந்து, புத்த, சமண மத மக்களுக்கு இது புனித மரம். புத்தரோடு தொடர்புடைய ஏழு புனித மரங்களுள் மகிழமும் ஒன்று.திருக்கைலாய மலையில் சுந்தர மூர்த்தி சுவாமிகளால் விரும்பப்பட்ட இரு பெண்களில் ஒருவர் கமலினி என்ற ப்ரவை நாச்சியார் மற்றொருவர் அநிந்திதையார் என்ற சங்கிலி நாச்சியார். பரவை நாச்சியாரை திருவாரூரில் மணந்தார். சங்கிலி நாச்சியாரை மணம் செய்து கொள்ளும்போதுதான் மகிழம்பூ மரம் இருவரின் வாழ்விலும் நுழைந்தது. சென்னை - திருவொற்றியூர் அருகே ஞாயிறு எனும் ஊரில் வாழ்ந்து வந்த பெரியவரின் அருமை மகள் சங்கிலி நாச்சியார். இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத சங்கிலி நாச்சியாருக்கு சிவத் தொண்டில் ஈடுபாடு ஏற்பட்டது. மகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சங்கிலி நாச்சியாரின் தந்தை திருவொற்றியூர் ‘எழுத்தறியும் பெருமான்’ கோயிலின் அருகே கன்னி மாடம் ஒன்றை அமைத்து சங்கிலி நாச்சியாரை அங்கு தங்க வைத்தார்.

சங்கிலி நாச்சியாரும் சிவபெருமானுக்குரிய தொண்டாகிய மலர் மாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். திருமண வயது வந்தது. தல யாத்திரை வந்த சுந்தர மூர்த்தி சுவாமிகள் முற்பிறவியிலே அநிந்திதையாராக இருந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டவுடன் மனம் நாச்சியார் பின்னே சென்றது. திருவொற்றியூர் கடவுளான படம் பக்க நாதர் என்றழைக்கப்படும் ஆதிபுரீஸ்வரரிடம் சென்று சங்கிலி நாச்சியாரை மணம் முடித்து வைக்குமாறு மனமுருகி வேண்டி நின்றார்.சுந்தர மூர்த்தி சுவாமிகளின் மனக் குறையைத் தீர்க்க முடிவெடுத்த கடவுள் சுந்தரரின் கனவில் தோன்றி ‘சங்கிலியை மண முடித்துத் தருகின்றோம் வருந்தற்க’ என சொல்லிவிட்டு சங்கிலி நாச்சியாரிடம் சென்று அவர் கனவில் தோன்றி

‘‘சாலும் தவத்துச் சங்கிலி கேள்!
சாவ என்பால் அன்புடையான்
மேருவரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரும் அறிய யான் ஆள்
உரியான் உன்னை எனை இரந்தான்
வார்கொள் முலையாய்! நீ அவனை
மணத்தால் அணைவாய் மகிழ்ந்து”
என்றார்.

சங்கிலி நாச்சியாரும் கடவுளின் காலடியில் நமஸ்கரித்து எம்பெருமானே தேவரீரின் உத்திரவுப்படி சுந்தரரை மணக்கச் சித்தமாயுள்ளேன். ஆனால் அவர் ஏற்கனவே ப்ரவை நாச்சியாரை மணம் முடிந்தவராயிற்றே என்று கூற ‘வன்தொண்டன் உன்னைப் பிரியாதிருப்பதற்கு சபதம் செய்வான்’ என்றார்.சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் திருவொற்றியூர் கடவுள் சென்று நடந்ததைக் கூறி
‘சங்கிலி நாச்சியாரைப் பிரியாதிருக்க சபதம்
செய்வாயாக’ என்றார்.

சங்கிலி நாச்சியாரை மணம் முடிக்கும் மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க தல யாத்திரை சென்று இறைவனைத் தரிசிக்க தடையாக இருக்குமே என நினைத்ததை சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை நோக்கி சங்கிலி நாச்சியாருடன் நான் தங்கள் முன் சபதம் செய்ய வரும் போது தேவரீர் திருக்கோயில் விட்டு விலகி மகிழ மரத்தின் கீழ் எழுந்தருள வேண்டுமென அன்புக் கட்டளையிட, இறைவனும் அதற்கு இணங்குவது போல் இணங்கி, நேரே சங்கிலி நாச்சியாரிடம் சென்று ‘சங்கிலியே நாளை சுந்தரன் சத்தியம் செய்ய உன்னோடு என் சந்நதிக்கு வருவான். அப்போது நீ சந்நதியில் வேண்டாம் மகிழ மரத்தின் கீழ் சத்தியம் பெற்றுக்கொள் என்று கூறி மறைந்தார். மண நாளன்று மகிழடியில் சத்தியம் செய்தால் போதும் சந்நதியில் வேண்டாம் என சங்கிலி நாச்சியார் சொல்ல மறுத்துப் பேச முடியாத சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்,

‘தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து
மேவாதிங் கியான் அகலேன்’ என நின்று பாடினார், பூவார்தன் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலானார்.

இன்றும் மகிழின் கீழ் செய்த சத்தியத்தை மக்கள் மகிழடி சேவை என திருவிழாவாக மாசி மாதத்தில் கொண்டாடி வருகின்றனர். திருவொற்றியூர் கோயிலின் உள்ளே நுழைந்தால் முதல் தரிசனம் மகிழமர மேயாகும். மூல ஸ்தானத்தை விட மகிழடி ஆதி மூர்த்தியே சிறப்பானவர். மகிழ மரத்திற்கு முக்கிய இடம் கொடுத்துவிட்டு கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை தென்புறமாக உள்ளன. மனதை மயக்கும் மகிழம்பூ ஆன்மிகத்தோடு தொடர்புடையது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. எனவே மகிழ மலர்களை மனதில் நிரப்பிக் கொண்டே எண்ணங்களைத் தூய்மையாக்குவோம். 

Tags : Shiva ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு