×

அழகன் முருகனின் அபூர்வ வடிவங்கள்

அழகன் திருமுருகப் பெருமானின் திருஉருவை வருணித்து ஆதிசங்கரர் தமது சுப்பிரமணிய புஜங்கத்திலும், அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பாவிலும், பாம்பன் சுவாமிகள் சண்முகக்கவச நூலிலும், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர் சந்நதி முறையிலும், அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் தம் திருவருட்பாவிலும், கந்த சஷ்டி கவசம் தந்தருளிய தேவராய சுவாமிகளும் அற்புதமாகப் பாடி அருளியுள்ளார்கள் !

எங்கும்  நிறைந்தவன் முருகன்! இயற்கையின் எழில் வடிவம் எல்லாம் அவன் உருவமே! அழகுடன் விளங்குபவை எல்லாம் ஆறுமுகனின் தோற்றமே! ஆலயங்கள் தோறும் அருளாட்சி புரியும் அழகன் முருகனின் அபூர்வ வடிவங்களைக் கண்டு தரிசிப்போம் வாருங்கள்!பல நூற்றாண்டுகள் பழமையான சரித்திரப் பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு மலைமீது உள்ள செங்கோட்டு வேலவன் கையிலிருப்பது கல்லால் ஆன வேல் ஆகும். இது முருகப் பெருமானது தலைக்கு மேலே உள்ள கீரிடத்திற்கு மேல் 3 அங்குலம் நீட்டிக்கொண்டிருக்கிற அற்புதத்தைக் காணலாம். இவ்வேல் முருகனின் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே இதைக் குறைக்கவும் முடியாது உடைக்கவும் முடியாது.

திருமுருகப் பெருமான் பஞ்சலிங்கங்களைப் பூஜித்த தலம் திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூர் ஆகும். அருள்மிகு செந்தில் ஆண்டவருக்குப் பின்னால் ஐந்து சிவலிங்கத் திருமேனிகளைக் காணலாம். கருவறையில் முருகன் கைகளில் மலர், தண்டம் மற்றும் ஜெப மாலையுடன் காட்சி தருகிறார்.

தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது மற்றொரு சிறப்பு.

திருச்செந்தூர் திருத்தலத்தில் முருகன் தனது திருக்கரத்தில் தாமரை மலரோடு சிவபெருமானைப் பூஜை செய்யும் வண்ணம், ஒரு கரத்தில் ஜெபமாலை, மற்றொரு கரத்தில் சக்தி ஹஸ்தம், இன்னொரு கரத்தில் தாமரை மலர் இவற்றுடன் தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

பழனி, திரு ஆவினன்குடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோயில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இங்கே முருகன் குழந்தையாக மயில்மீது அமர்ந்து நெல்லிமர நிழலில் கோயில் கொண்டுள்ளார். மலை உச்சியில் முருகன் ராஜ அலங்காரத்தில் ஓர் அரசரைப் போல உயரமான கருவறையில் காட்சி தருகிறார்.

கும்பகோணம் - சுவாமிமலையில், சுவாமிநாத சுவாமியின் சந்நிதிக்கு எதிராக மயிலுக்கு பதிலாக யானை வாகனம் உள்ளது. இது தேவேந்திரன் அளித்தது என்பது ஐதீகம். கருவறையில் முருகன் வலக்கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள்
பாலிக்கிறார்.

திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிதே வீற்றிருந்து அருள்கிறார். ‘குன்று தோறாடல்’ என்பது முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையும் குறிக்குமாயினும், அது திருத்தணிகைத் தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கிறது எனத் தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர்.

சிலம்பாறு எனப்படும் நூபுர கங்கையில் பழந்தமிழர் முருகனை வேல் வடிவமாக வழிபட்ட தொன்மை வாய்ந்த திருத்தலம் பழமுதிர் சோலை. இங்குதான் முருகன் மாட்டுக்கார வேலனாக வந்து காட்சி தந்தாராம், அவ்வைப் பாட்டிக்கு!

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ‘இரண்டு அடுக்கு’ கோயில் ஆகும். மலையில் அடர் வனத்துக்கு மத்தியில் அமைந்த கோயிலில் காலப்போக்கில் மூலவர் சிலை சிதைவானது. கோயிலும் சேதமடைந்திருந்தது. வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் பழைய சிலையை அகற்ற முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டு, அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

இவ்வாறு கீழே ஒரு முருகன் மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. பிரதான மூலஸ்தானத்தில் அற்புதக் கோலம் கொண்ட முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கில் உள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி இடக்கையை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இங்கே இவருக்கு எப்போதும் ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்.

சென்னை - கோடம்பாக்கம் வடபழனி யாண்டவர் கோயிலில் மூலவர் பாத காலணி
களுடன் அருள்புரிகிறார். பாத காலணிகள் அணிந்திருப்பது ஆணவத்தையும் அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. மூலவரின் வலது காலானது சற்று முன் வந்ததுபோல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை விரைந்து வந்து நீக்குவதாக ஐதீகம். இத்தலத்தின் சிறப்பு வேறு  எந்த படை வீட்டிலும் காண முடியாதது.

எட்டுக்குடி முருகன் கோயில் சிவனடியார்க்கும், முருகனடியார்க்கும் ஆரா இன்ப அருளமுது பாலிக்கும் அருந்தலம் ஆகும். கந்தபுராணத்தில் கூறியுள்ளபடி இங்கு முருகன் சூரபத்மனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய  மயில்மீது ஏறி அமர்ந்து. அம்பறாத்தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் உள்ள வீர சௌந்தர்யம் உடையவராக வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுள்தான் இங்கு மூலவராக உள்ளார். இங்கு முருகன் மிகவும் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

சேலம் நகருக்கு அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உடையாபட்டி கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமானும் அன்னை பார்வதியும் எதிரெதிர் சந்நதியில் இருப்பதை இங்குத் தவிர வேறெங்கும் காணமுடியாது. அம்பாள் உயிராகவும், முருகன் அறிவாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இங்கே மற்றொரு அதிசயமாக முருகனைச் சுற்றி மனைவியருடன் சேர்ந்த நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கந்தசாமி திருக்கோயில். இக்கோயிலில் கந்தசாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக ‘சுப்பிரமணியர் யந்திரம்’ பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகனுக்கு பூஜை நடந்த பின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். வாய்மீது கைவைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் முருகன் சிலையும், கையில் வில்லேந்தி, மயில் மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமி சிலையும் இங்கே உள்ளன.

தொண்டை நாட்டில் கமண்டல நதிக்கரையில் மிகவும் புகழ் பெற்ற தலம் குண்டலீபுரம். இங்குள்ள ரேணுகாதேவி ஆலயத்தில் வடக்குப்புறம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயிலின் மீது வள்ளி நாயகன் முருகப் பெருமான் நின்றபடி காட்சியளிப்பது வியப்பானது. இங்கு போகர்
பிரதிஷ்டை செய்த வீரவேலுக்குத்தான் அபிஷேக, ஆராதனை, நைவேத்திய உபசாரங்கள் எல்லாம் நடைபெறுகிறது.ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் உள்ள பச்சை மலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு 41 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட மிகப் பிரமாண்டமான முருகன் சிலை உள்ளது. சுமார் 1600 அடி உயரம் கொண்ட மலையின் மீது இந்த முருகன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய முருகன் சிலை இது என்று கூறப்படுகிறது.

திருச்சிக்கு அருகில் 30 கல் தொலைவில் உள்ளது. செட்டிக்குளம் முருகன் கோயில். வடபழனி என்று அழைக்கப்படும் சிறுகுன்றின் மீது கோவணாண்டியாகக் கரும்பினை வில்லாக ஏற்று நிற்கும் அழகன் முருகனை இங்கு தவிர வேறு எங்குமே காண முடியாது.

கழுகுமலையில் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானது. இங்குள்ள முருகப் பெருமான் இடப்பக்கமாக திரும்பி நிற்க, இடது பக்கமாகத் திரும்பி நின்ற நிலையில் இருக்கும் மயில் வாகனத்தில் கம்பீரமாக ஆறு கைகளுடன் மேற்கு முகமாகப் பக்தர்களுக்கு காட்சியளிப்பது அபூர்வமான திருக்கோலம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் மாறுபட்டு ‘பலி பீடம்’ ஒன்றின் வடிவில் முருகன் மூலவராக எழுந்தருளியுள்ளார். அவரே கொளஞ்சியப்பர் எனப்படுகிறார். மணிமுத்தா நதிக்கரையில், மணவாள நல்லூரில் பலிபீட வடிவிலே காட்சி தரும் இந்த பால முருகன் மிகுந்த வரப்பிரசாதி. தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவர் என்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் காங்கேயத்துக்கு அருகில் உள்ளது சிவன் மலை. இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகன் பெயர் ‘‘அன்னதான சிவாசல சுப்பிரமணிய சுவாமி’’ என்ற திருநாமம் கொண்டு எழில் வடிவில் உள்ள வள்ளியம்மையுடன் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். சிவவாக்கியருக்கு முருகன் அருள்பாலித்ததால்  சிவன்மலை எனப் பெயர் பெற்றது.நெய்வேலி அருகே அமைந்துள்ளது, வேலுடையான்பட்டு முருகன் கோயில். இது கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரத்துக்கு முன்பாக ஏழு வேல்கள் பெரிய அளவில் நடப்பட்டிருக்கின்றன. கருவறையின் இருபுறங்களிலும்
8 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் உள்ளனர்.

மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கையில் வில்லும் அம்பும் ஏந்த பாதங்கள் இறகு அணிந்து ஒரு வேடன் போல் அருள்பாலிக்கிறார். இந்த மூலஸ்தான சிற்பம் அற்புதமாக ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். பக்தர்கள் கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகள் செலுத்தும் பழக்கம் உள்ளது.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள பொன்னூரில் ஆபத்சகாலேஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக இரண்டு கரங்களுடன் அழகாகக் காட்சி தருகிறார். இவரது காதுகளில் வட்ட வடிவமான பெரிய அளவில் கம்மலுடன் (தோடு) தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் அதிசயமாக ஆறுமுகங்களுடன் ஆறு கரங்களுடன் அருளாட்சிபுரிகிறார்.

அரிசிக்கரைப்புதூரில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன், மகாவிஷ்ணுவைப் போல கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.
திரும்பனையூர் என்ற திருக்கோயிலில் ஸ்ரீசௌந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமானும், பார்வதியும் இருபுறமும் வீற்றிருக்க நடுவில் முருகப் பெருமான் தன் இடக்கையில் மாம்பழம் ஏந்திய வண்ணம் உள்ளார். இது சோமாஸ்கந்தர் வடிவம் எனப்படும்.கடம்பனூர், கடம்பர் வாழ்க்கை, ஆழியூர், இளம் கடம்பனூர், பெருங்கடம்பனூர், கீழ்வேளூர், பட்ட மங்களம், தேவூர் கோயில் ஆகிய திருத்தலங்களில் முருகன் நவலிங்க பூஜை செய்யும் கோலத்தில் இருக்கிறார்.

சுருளி மலையில் உள்ள இயற்கையான மலைக்குகையில் முருகன் உறைவதால் குகன் என்றும் சுருளி மலையில் இருந்து தரிசனம் தருவதால் சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு ஆண்டிக்கோலத்தில் உள்ள முருகன் திருக்கோலம் எழில் நிறைந்தது.சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கிறார். உற்சவத்தின்போது, ஆலயத்தில் கட்டு மலையில் சோமாஸ்கந்தர் சந்நதியில் அமர்ந்து தரிசனம் தரும்போது பெருமானின் தேகத்திலிருந்தும், அவருடைய இரு தேவியரின் மேனியிலிருந்தும் வியர்வைத்துளிகள் அரும்பு வது காணக் கண் கொள்ளாக் காட்சியாகும்.

நாமக்கல் அருகில் உள்ள கபிலர் மலையில் முருகன், குழந்தைகுமார சுவாமியாகக் காட்சி தருகிறார். அவரது உருவம்  ஞானவடிவானது. சந்தனக் கலவையும் புரிநூலும் மார்பில் எழில் சேர்க்கின்றன. வேற்படையே அவருக்குரிய ஆயுதமாகக் கரங்களில் மிளிர்கிறது. முண்டிதம் செய்த முடியுடனும், இடையில் கோவணத்துடனும் வேலாயுதத்துடனும் பெருமான் காட்சியளிக்கிறார்.முருகனுக்கு அமைந்த வாகனம் பெரும்பாலோருக்குத் தெரிந்தது ‘மயில்’ ஒன்றுதான். ஆனால் அழகன் முருகனுக்கு மயில், ஆடு, யானை, குதிரை, சிம்மம், கிளி, நாகம், மீன் என்று பல வாகனங்கள் உண்டு.

திருத்தணி, திருப்பரங்குன்றம், செட்டி குளம், பிரான்மலை, சிதம்பரம், இரத்தினகிரி, மாகறல், வேலூர் - ஆகிய இடங்களில் உள்ள திருக்கோயில்களில் முருகன் ‘யானை’ வாகனத்தில் வீற்றிருப்பதைக் காணலாம்.திருப்போரூர் சென்றால் கோயிலை வலம் வரும்போது ஆட்டு வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனத்துடன் கூடிய அழகன் முருகனைக் காணலாம்.மருங்கூர் என்ற திருத்தலத்தில் ஆட்டு வாகனத்துடன் உள்ள முருகப் பெருமானைக் கண்டு சேவிக்கலாம்.

மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மூலவரான முருகன் தேவ சேனாபதிக்குக் கீழே ஆடு, மயில், யானை, சேவல் ஆகிய  நான்கு வாகனங்கள் இருப்பதைக் காணலாம்.கோவைக்கு அருகில் உள்ள மருதமலையில் உள்ள சின்னப்ப தேவர் கட்டிய மண்டபம் ஒன்றில் சுமார் 5 அடி உயரமான குதிரையின் மேல் முருகன் வேலைப் பிடித்துக் கொண்டு வீற்றிருக்கிறார். குதிரைக்குக் கீழே மயில் ஆடிக்கொண்டும், அதற்குக் கீழே நாகம் இருப்பதையும் காணலாம். குதிரையின் தலைப்பக்கம் சிவபெருமானும் கால் பக்கம் பார்வதியும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

குன்றக்குடி திருத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனியாக ஆளுக்கொரு மயில் மீது அமர்ந்திருக்கின்ற அழகிய அற்புதக் கோலத்தைக் காணலாம்.முருகன், மீனின் மீது நிற்கின்ற கோலத்தில் காங்கேயத்தில் உள்ள அய்யப்பன் திருக்கோயிலில் கண்டு மகிழலாம்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலுள்ள முருகனுக்குச் சிங்காரவேலன் என்று பெயர். இவர் நடுவில் மயில் மீது அமர்ந்திருக்க, வள்ளி, தெய்வானை இருவரும் ஆளுக்கொரு யானையின் மீது இருபுறமும் அமர்ந்திருக்கின்ற அபூர்வக் கோலத்தைக் காணலாம்.

ஆவூர் ஆலயத்தில் முருகன் கையில் தாமரை மலரை ஏந்தியுள்ள காட்சியைக் காணலாம். சிவனுக்கு பூஜை செய்த கோலம் இது.கோவை மாவட்டத்தில் உள்ள குருந்த மலையில் உள்ள முருகன் இரண்டு கண்களையும் அகலமாகத் திறந்து நம்மைப் பார்க்கும் கோலத்தில் அருள்மழை பொழிகிறார்.  கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி எனும் ஊருக்கு அருகேயுள்ள கனககிரி எனும் தலத்தில் உள்ள முருகன் கையில் அழகிய கிளியுடன் காட்சி தருகிறார்.

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள முருகனுக்கு கல்யாண சுப்பிரமணியர் என்று பெயர். இவர் கையில் மாம்பழம் வைத்துள்ள அதிசயக் காட்சியைக் காணலாம்.திருவிடைக்கழி, திருவண்ணாமலை, சாயா வனம், வில்லுடையான் பட்டு ஆகிய திருத்தலங்களில் முருகப்பெருமான் கையில் வில்லும் அம்பும் ஏந்தியவராகக் காட்சி தருகிறார்.சென்னை அரசு அருங்காட்சியகத்தில் அபூர்வமாக ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட நடனமாடும் சுப்பிரமணியனைக் காணலாம்.

கோடிக்கரை அழகர்கோயிலில் ஒரு முகத்துடன் ஆறு கரங்களுடன் கையில் அமுதகலசம் ஏந்திய முருகனைக் காணலாம்.முருகப் பெருமானைச் சாதாரணமாக ஒருதலையுடனோ, ஆறு முகத்துடனோ நாம் கண்டிருப்போம். ஆனால், இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, ஐந்து தலை, பத்து தலை, பதினொரு தலைகளையுடைய முருகனுடைய திருவடிவங்களை பல திருத்தலங்களில் கண்டு தரிசனம் செய்யலாம்.புகழ் பெற்ற ஈரோடு - சென்னிமலையில் முருகன் இரண்டு தலைகளுடன் காட்சி தருகிறான். இவருக்கு அக்னி ஜாதர் என்று பெயர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசி பாளையம் மலைக்குன்றின் ஆலயத்தில் முருகன் மூன்று தலைகளுடன் அருள்பாலிக்கிறான்.
திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள சின்னாளப் பட்டியிலும், சென்னி மலையிலும் நான்கு தலைகளையும் எட்டு கரங்களையும் உடைய முருகன் மயில்மேல் அமர்ந்த வடிவில் காட்சி தருகிறார்.கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்திற்கு அருகிலுள்ள ஓதியமலையில் ஐந்து தலை
களும் எட்டுக்கரங்களும் உடைய முருகனைக் காணலாம்.

ஆறு தலைகளையும் பன்னிரண்டு கரங்களையும் உடைய ஆறுமுகனை மயில்மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள அழகிய வடிவத்தைப் பல தலங்களில் காணலாம்.குற்றாலத்திற்கு அருகில் உள்ள இலஞ்சி என்ற திருத்தலத்தில் பத்து தலைகள் கொண்ட முருகனைக் கண்டு தரிசிக்கலாம்.
பழநிமலையில் வடக்குப் புறமுள்ள மண்டபத்தில் பதினொரு தலைகளையும் இருபத்து நான்கு திருக்கரங்களையும் உடைய விஸ்வரூப நிலை கொண்ட முருகனைக் காணலாம்.திருப்போரூர் திருக்கோயிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் 6- அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். பெண் பனை மரத்தாலான இந்த மூவருக்கும் அபிஷேகம் எதுவும் கிடையாது. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.

பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு என்ற தலத்தில் உள்ள முருகன் 6½ அடி உயரம்; இடது புறம் உள்ள தெய்வானை
கீரிடத்துடன் இருக்கிறார். வலது புறம் உள்ள வள்ளிக் குறத்தி கொண்டையுடன் காட்சி தருகிறார். இது போன்ற அமைப்பு வேறு எந்தவொரு ஆலயத்திலும் இல்லை.ஆண்டார் குப்பத்தில் உள்ள முருகன் பிரம்மனிடம் பிரணவப்பொருளுக்கு விளக்கம் கோரும் கோலத்தில் உள்ளார். இங்கே முருகனுக்கு எதிரே மயில் இல்லை. பிரம்மனின் வடிவத்தைத்தான் காணலாம்.

வல்லக்கோட்டை திருக்கோயிலில் 7 அடி உயரமான வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானை தரிசிக்கலாம்.எட்டு அடி உயரமுள்ள பிரம்ம சாஸ்தாவை, சென்னை வளசரவாக்கம் பகுதியில் காணலாம். இந்த முருகனின் வலது காலில் 6 விரல்கள் இருக்கின்றன.
பத்து அடி உயரமுள்ள முருகனை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலி மலையில் கண்டு தரிசிக்கலாம்.

நாகத்தின் மீது நிற்கின்ற முருகப்பெருமானை சென்னை  - மேற்கு மாம்பலத்தில் உள்ள முருகாஸ்ரமத்தில் காணலாம்.மதுராந்தகத்திற்கு அருகில் குமாரவாடி எனும் திருத்தலம் உள்ளது. இங்குள்ள திருக்கோயிலில் முருகன் யோக நிலையில் பத்மாசனமிட்டு கண் மூடிய வண்ணம் அமர்ந்த கோலத்தில் கந்தக் கடவுளாக சாந்தமாக காட்சி தருகிறார்.

பரமக்குடிக்கு அருகில் உள்ளது பார்த்திபனூர் என்னும் முருகன் கோயில். இங்கு முருகப் பெருமான் போர்க்கோலம் பூண்ட வீரனாக ஆயுதங்கள் தாங்கி நின்ற திருக்கோலத்தில் அருங்காட்சியளிக்கிறார்.திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி என்னும் திருத்தலத்தில் உள்ள சிவாலயத்தில் முருகப் பெருமான் முனிவர் போன்று ஜடாமுடியுடன் கூடிய திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள சங்கேந்தி என்ற திருக்கோயிலில் உள்ள திருமால் ஆலயத்தில் சுமார் 8 அடி உயரமுள்ள உருண்டை விழிகளும் மீசையும் கொண்டு, சூனிகள் அடித்த பாதக்குறடுகள் அணிந்து அசுரனாக காட்சி தரும் வடிவத்தை ‘அசுர முருகன்’ என்கிறார்கள்.

கேரளாவில் உள்ளது பெருன்னா முருகன் கோயில். இங்கே முருகப் பெருமான் 5 அடி உயரத்தில் தாமரைப் பூ பீடத்தில் நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகிறான். இவனை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கிறார்கள். இத்திருத்தலம் கேரளத்தின் ‘பழனி’ என்று போற்றப்படுகிறது. மற்றொரு அதிசயம் என்னவென்றால் திருமுருகப் பெருமானின் நீண்ட கைவேல், எங்கும் இருப்பது போல் வேலின் கூரிய முனை மேல் நோக்கி இல்லாமல், சூரபத்மனை சம்ஹரிக்கும்போது எப்படி வேலின் கூரினைக் கீழ்நோக்கிக் குத்திட்ட நிலையில்  உள்ளது. இத்தகைய கோலம் வேறு கண்டு தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வந்து போகிறார்கள்.

கர்நாடகா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஒரே முருகன் கோயில் ‘ஸ்ரீசுப்பிரமணியா’. மங்களூருக்குத் தென் கிழக்கே 65-மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீசுப்பிரமணியர் திருத்தலம் பழனியைப் போல புனிதம் மிக்க தாய் கருதப்படுகிறது. இங்கு நடைபெறும் நாகசாந்தி, சர்ப்ப பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தவை. இங்குள்ள குமார பர்வதத்தின் மலை உச்சியில் குமரனின் இரு  பாதங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து குமாரதாரா நதியும் தர்ப்பண நதியும் உற்பத்தியாகின்றன. இவ்விரு நதிகளும் ஸ்ரீசுப்ரமண்யாவைச் சுற்றி ஓடுகின்றன. குமார பர்வத மலையில் அதிசயமாக சண்முக லிங்கம் கிடைக்கிறது.

அதிலுள்ள ஆறு பட்டைகள் முருகனின் ஆறு  முகங்களாகக் கருதப்படுகின்றன. துவரம் பருப்பு அளவிலிருந்து முக்கால் அங்குல அளவு வரை கிடைக்கிறது. இவற்றை சாளக்கிராமம் போலவும், சிவலிங்கம் போலவும், முருகப் பெருமான் போலவும் கழுதி பூஜையில் வைத்துக் கொள்
கிறார்கள். ஸ்ரீசுப்ரமண்யா கோயில் கருவறையில் சண்முகர் மயிலின் மீது அமர்ந்திருக்கிறார்.

அவருக்கு கீழே வாசுகி நாகம் உள்ளது. அதுக்கும் கீழே சாளக்கிராமங்கள் இருக்கின்றன. ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. சுப்ரமணியரின் இடது கால் மடங்கியும், வலது கால் கீழ்நோக்கியும் உள்ளன. வழக்கமான ஆறு முகங்கள், பன்னிரண்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார்.கேரள மாநிலம் ஆல்வாய்க்கு மேற்குத் திசையில் பரூரிலிருந்து சுமார் 20.கி.மீ. தொலைவில் உள்ளது. ‘இளங்குன்னபுழா’ என்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில், இதைக் கேரளத்தின் திருச்செந்தூர் என்கிறார்கள். 800 ஆண்டுகள் பழமையானது.

இங்குள்ள முருகனின் மூல விக்ரகம் திருச்செந்தூரில் இருந்தது என்றும், சிறிது பின்னமான போது அதைக்கடலில் போட்டு விட்டார்கள் என்பதும், அது அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள கடற்கரையில் ஒதுங்கியது என்பதும் வரலாறு. கொச்சி மகாராஜா முன்வந்து ஒரு கோயிலை உருவாக்கினார். முருகன் விக்ரகம் இடுப்புக்கு கீழே பின்னமாகி இருந்தது. அதை எப்படிப் பிரதிஷ்டை செய்வது என்று பிரச்னை வந்த போது பிரச்னம் வைத்துப் பார்த்ததில் இடுப்பு வரையில் கற்சிலையாகவும், அதற்குக் கீழ் பஞ்சலோகமாகவும் அமைத்துப் பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவாயிற்று.

அப்படியே செய்தார்கள். அழகிய மூல விக்ரகம் பீடத்துடன் சேர்த்து 5½ அடி உயரம் இருக்கிறது. அதுர்புஜங்கள் மேலிரு கரங்களில் சக்தி ஆயுதமும், கீழ் வலது கரம் அபயஹஸ்தமாகவும் இடக்கையை இடுப்பில் ஊன்றியவாறும் அற்புத கோலம் காட்டி அழகு முருகன் காட்சியளிக்கிறார்.
பெங்களூரிலிருந்து ‘தொட்ட பல்லாபூர்’ போய் அங்கிருந்து 11 கி.மீ. தொலைவு போனால் ‘காட்டி சுப்ரமண்யா’ என்ற ஊர் வருகிறது.

இங்கு கோயில் கொண்டிருக்கும் மூலவருக்கும் ஊருக்கும் ஒரே பெயர் தான். கோயில் வாசலில் வேலியிட்ட மேடை மீது பெரிய நாகப் பாம்பின் சிலை படம் விரித்து  குடைபோல் நிழல் தந்துகொண்டிருக்க அதன் அடியில் மயில் வாகனனாய் நிற்கும் சுப்பிரமணியரைக் காணலாம். மூலஸ்தான
விக்ரகத்தில் முன்புறம் சுப்பிரமணியரின் முகமும் பின்புறம் நரசிம்ம  சுவாமியின் முகமும்  அமைந்திருப்பதைக் கண்ணாடி மூலம் காணலாம். உற்சவரும் சர்ப்ப உருவம் கொண்ட சுப்பிரமணியர்தான். இங்கு பிரசாதமாக புற்றுமண் வழங்கப்படுகிறது. பாம்பு வடிவில் முருகன் அருள்பாலிக்கும் கோயில் இது ஒன்றுதான்.

இலங்கைத் தீவின் முக்கியமான முருகன் கோயில் கதிர்காமம். அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவில் என்றும் வற்றாத மாணிக்க கங்கை என்ற நதிக்கரையில் இத்தலம் உள்ளது. இத்தலத்தில் விக்ரக ஆராதனை கிடையாது. மூல ஸ்தானத்திற்கு முன்னால் திரைகள் தொங்குகின்றன. திரைக்குத்தான் தீபாராதனை. உள்ளே ஒரு வேல் இருக்கிறது. மரகத வேல் என்பது பெயர். அதற்குத்தான் அபிஷேகம். இதுவே முருகனாக வழிபடப்படுகிறது. இப்படி உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ஆலயங்களில் அழகன் முருகன் அபூர்வ வடிவம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

டி.எம். இரத்தினவேல்

Tags : Murugan ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...