ஐதராபாத்: ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்ப்பவர்கள், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், தமிழ் படங்கள் இந்தி மொழியில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல.
அது எங்களின் தாய்மொழியை, எங்களது கலாச்சார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியாகும். இதை யாரேனும் பவன் கல்யாணுக்கு எடுத்துச் சொல்லவும்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்தார். பிறகு மேலும் ஒரு டிவிட்டில், பவன் கல்யாணின் இந்தி திணிப்பு ஆதரவு பேச்சை கோடிட்டு, ‘‘தேர்தலுக்கு முன் ஜனசேனாவாக இருந்த இவரது கட்சி, இப்போது பஜன் சேனாவாக மாறிவிட்டது’’ என கடுமையாக சாடியுள்ளார். 2014ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராக பவன் கல்யாண் பேசிய பேச்சுகளை இப்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள். ‘இரட்டை வேடம் போடும் பவன் கல்யாண்’ என்றும் கடுமையாக அவரை விமர்சித்துள்ளனர்.
