×

வாழ்வினில் வசந்தம் வீசும்..!

?எனக்கு திருமண வாழ்வு மிகவும் பிரச்னையாகவும் கவலைக்கு உரியதாகவும் உள்ளது. 2005ல் முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது. குழந்தை இல்லை. 2018ல் இரண்டாவது திருமணம் நடந்து அதுவும் பிரச்னையாகி தற்போது விவாகரத்து வழக்கு தொடுக்க உள்ளோம். என் வாழ்வு இப்படியே முடிந்துவிடுமா? நல்வாழ்விற்கு உரிய வழிகாட்டுங்கள்.
- கன்னியாகுமரி வாசகர்.


அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் மூன்றாம் பாவக அதிபதி சந்திரன் நீசம் பெற்று அமர்ந்திருப்பதும் சந்திரன் சனியின் சாரம் பெற்றிருப்பதும் களத்திர தோஷத்தைத் தந்திருக்கிறது. ஏழாம் பாவகத்தின் மீது உச்சம் பெற்ற குருவின் பார்வை விழுவதால் திருமணம் நடந்தும் அதனை தக்கவைத்துக் கொள்ள இயலாது தவித்து வருகிறீர்கள். பெற்ற தாயாருடன் கருத்து வேறுபாடு, மனைவியுடன் மனஸ்தாபம் என்று பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாமல் கஷ்டப்படுகிறீர்கள். சுக்கிரனின் எட்டாம் இடத்து அமர்வு உங்களுக்கு இந்த நிலையைத் தந்திருக்கிறது. விவாகரத்திற்கு அவசரப்
படாமல் தம்பதியர் இருவரும் நிதானமாக கலந்தாலோசித்து முடிவெடுங்கள். அடுத்தவர் மனதைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். உத்யோக ஸ்தானம் என்பது உங்களுக்கு மிகவும் வலிமையாக உள்ளது. வாழ்நாள் வரை சம்பாத்யத்திற்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை. மனைவியுடன் இணைந்து ஆதரவற்ற முதியோருக்கு தான தருமங்களைச் செய்து வாருங்கள். தினமும் காலையில் தம்பதியராக இணைந்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை பூஜையறையில் விளக்கேற்றி வைத்து சொல்லி வாருங்கள். ஒரு மாத காலத்திற்குள் வாழ்வினில் வசந்தம் வீசக் காண்பீர்கள். “அம்போதர ச்யாமல குந்தலாயை தடித்ப்ரபா தாம்ரஜடாதராய
நிரீச்வராயை நிகிலேச்வராய நம:சிவாயைச நம: சிவாய.”

?எனது மகனுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்ளுக்கு மேல் ஆகிவிட்டது. குழந்தை பாக்கியம் இதுவரை கிட்டவில்லை. வைத்தியமும் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா? விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் கூறுங்கள்.
- செல்வராஜூ, விழுப்புரம்.


கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. மகனின் ஜாதகத்தில் பிள்ளைப் பேற்றினைப் பற்றிச்சொல்லும் ஐந்தாம் வீட்டில் நீசம் பெற்ற ராகுவின் அமர்வும் ஐந்தாம் பாவக அதிபதி சுக்கிரனின் எட்டாம் வீட்டு சஞ்சாரமும் பிள்ளைப் பேற்றினை அடைவதில் தாமதம் உண்டாக்குகிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. இவரது ஜாதகத்தில் புத்ர ஸ்தான அதிபதியும் புத்ரகாரகனுமான குரு வக்கிர கதியில் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் புத்ர பாக்யம் கிடைப்பதில் தாமதம் உண்டாவதற்கான காரணத்தைத் தருகிறது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் தசா புக்தியின் காலம் இருவர் ஜாதகப்படியும் குழந்தைப்பேறினை தர வல்லது. காலதாமதம் செய்யாமல் முழு நம்பிக்கையோடு மருத்துவ ஆலோசனையை தவறாமல் பின்பற்றி வரச் சொல்லுங்கள். அளவில் சிறியதான வெள்ளியினால் ஆன விநாயகர் விக்கிரகத்தை பூஜையறையில் வைத்து வழிபடுவதோடு அந்த விக்ரகத்திற்கு தம்பதியர் இருவரையும் தினந்தோறும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். 90 நாட்கள் தொடர்ச்சியாக பூஜித்து வர வெகு விரைவில் வம்சம் விருத்தியடைவதைக் கண் கூடாகக் காண்பீர்கள். குழந்தை பிறந்த பிறகு அந்த வெள்ளி விநாயகர் விக்கிரகத்தை குடும்ப புரோஹிதருக்கு தானமாக அளித்து அவரிடம் அருளாசியினைப் பெற வம்சம் நல்லபடியாக தழைத்து வாழும்.

?எனக்கு ஒரே மகன். அமெரிக்காவில் இருக்கிறான். ஜாதகப் பொருத்தம் பார்த்து விமரிசையாக விவாகம் செய்தேன். தற்போது விவாகரத்து ஆகிவிட்டது. என் பையனின் நிலை என்ன ஆகும்? மறுமணம் நடக்குமா? பரிகாரம் ஏதும் உண்டா?
- ரவீந்த்ரநாதன், பூனா.


புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. மூன்றாம் பாவகத்தில் சனியின் வக்கிர சஞ்சாரமும், சயன சுக ஸ்தானம் ஆகிய 12ல் குரு மற்றும் கேதுவின் இணைவும் உங்கள் மகனின் தாம்பத்ய வாழ்வினில் பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. தற்போது கேது தசை தொடங்கிவிட்டபடியாலும், கேதுவின் அமர்வு 12ல் சுயசாரம் பெற்றிருப்பதாலும் உங்கள் மகனே மறுமணத்தில் விருப்பமின்றி இருப்பதுபோல் தெரிகிறது. ஏழாம் பாவக அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலும் ஒன்பதில் சூரியனுடன் இணைந்து அமர்ந்திருக்கிறார். தற்போதைய சூழலில் உங்கள் மகனின் முழு கவனமும் ஆன்மிகப் பாதையை நோக்கி திரும்பும். மறுமணம் நடக்கும் என்று சொல்வதை விட தனது ஆன்மிகப் பாதைக்கு துணைநிற்கும் ஒரு பெண்ணை அவர் விரைவில் சந்திப்பார். அவரை தாம்பத்ய உறவிற்கான துணையாக எண்ணாமல் தனது ஆன்மிக வாழ்விற்கான துணையாக எண்ணி இணைந்து வாழ்வார். அவரது உத்யோகமும் சம்பாத்யமும் சிறப்பாக உள்ளது. மகனைப் பற்றிய கவலையை மறந்து கிருஷ்ணனை துதித்து வாருங்கள். மகன் இந்தியாவிற்கு வரும்போது குருவாயூர் சென்று குருவாயூரப்பனை தரிசிக்கச் செய்யுங்கள். அவரது வாழ்விற்கான அர்த்தத்தை புரிந்துகொள்வார்.

?எனக்கு நிரந்தர வேலையில்லை. தைராய்டு பிரச்னை உள்ளது. மனக்கஷ்டத்தால் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் வந்துள்ளது. தந்தையை சிறுவயதில் இழந்த எனக்கு எல்லாமே என் தாயார்தான். தாயாரின் உடல்நிலை நன்றாக இருக்கவும் எனது வாழ்வு சிறக்கவும் உரிய பரிகாரம் கூறுங்கள்.
- குமார், குழித்துறை.


புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்திற்கும் ராசிக்கும் அதிபதி ஆகிய புதன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் சிறப்பான எதிர்காலம் என்பது நிச்சயம் உண்டு. சொந்தத் திறமையாலும் உண்மையான உழைப்பினாலும் உயர்வு காணும் அமைப்பினை உங்கள் ஜாதகம் பெற்றிருக்கிறது. தைராய்டு பிரச்னை கவலைப்படும் அளவிற்கு இல்லை. மருந்து மாத்திரைகளின் மூலமாகவே அதனை கட்டுக்குள் வைத்திருக்க இயலும். தாயாரின் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் நீங்கள் மது அருந்துவதால் அவரது உடல்நிலை சரியாகிவிடுமா என்பதை எண்ணிப் பாருங்கள். வருகின்ற 06.04.2021 முதல் வாழ்வினில் திருப்புமுனை உண்டாகும். ஓரிடத்தில் அமர்ந்து செய்கின்ற பணியாக இல்லாமல் அலைந்து திரிந்து செய்கின்ற பணியாக அமையும். அதுவரை தற்காலிகமாக வண்டி வாகனங்கள் சம்பந்தப்பட்ட துறையில் நீங்கள் வேலைக்கு முயற்சிக்கலாம். பெரிய தொழிலதிபராக உருவெடுக்கும் அம்சம் நன்றாக உள்ளதால் மது அருந்தும் பழக்கத்தினை விடுத்து உழைப்பதற்குத் தயாராகுங்கள். 30வது வயதில் உங்கள் திருமணம் நடக்கும். தினமும் காலையில் விநாயகர் கோயிலுக்குச் சென்று அறுகம்புல் வைத்து வழிபட்டு வாருங்கள். வளமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது.

?12 வயதாகும் என் மகள் தற்போது பள்ளியில் படித்துவருகிறாள். எனக்கு 2011ல் ஆண் குழந்தை பிறந்து உடல்நலக் குறைவால் 4 மாதத்தில் இறந்துவிட்டது. அதன்பின் 2012ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தான். ஆனால் தற்சமயம் வரை சரியாக பேச்சு வராமலும் எதிலும் கவனம் இல்லாமலும் இருக்கிறான். தகுந்த சிகிச்சை அளித்து வருகிறோம். அவன் நல்லபடியாக வளர உரிய பரிகாரம் கூறுங்கள்.
- சென்னை வாசகி.


அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஒன்பதாம் பாவக அதிபதி குரு வக்கிர சஞ்சாரம் பெற்றிருப்பதோடு கேதுவுடன் இணைந்திருப்பது பரம்பரையில் உண்டான குற்றத்தினைச் சொல்கிறது. இவருக்கு முன்னதாக ஒரு ஆண் குழந்தை பிறந்து நான்கு மாதத்திற்குள் இறந்ததும் பரம்பரையில் உள்ள தோஷத்தை உறுதி செய்யும். குழந்தையின் பெற்றோர் ஆகிய உங்கள் இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அவர்கள் வழியில் உண்டான தோஷத்தினை அறிந்து அதற்கு பிராயச்சித்தம் தேட முற்படுவது நல்லது. சந்யாச சாபம் என்பது காணப்படுவது போல் உள்ளது. குலதெய்வ வழிபாட்டினை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது நடந்துவரும் நேரம் என்பது சாதகமாக உள்ளதால் நீங்கள் உங்கள் முயற்சியைத் துவக்கலாம். குலதெய்வத்தின் அருளால் உங்கள் மகனின் நல்வாழ்வு துவங்கிவிடும்.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்