லாஸ்ஏஞ்சல்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கிடையில், பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹி, தான் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறேன். காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற தீயை இதற்கு முன் பார்த்ததே இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது. 5 நிமிடங்களுக்கு முன்புதான் ஓட்டலை காலி செய்ய உத்தரவு வந்தது. அதனால் இங்கிருந்து உடனே புறப்பட்டேன். விமானம் ஒன்று இருப்பதால், அந்த விமானத்தில் செல்கிறேன்.
இதற்கு முன் எனக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்ததே இல்லை’ என்று கூறியுள்ளார் இதற்கிடையில் அவர் வெளியிட்ட வீடியோவில், லாஸ் ஏஞ்சல்ஸ் மலைகளில் ஏற்பட்ட பயங்கரமான தீப்பிழம்புகளை விவரித்து பேசியுள்ளார். காட்டுத் தீயில் நோரா மட்டுமின்றி, பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவும் காட்டுத் தீயின் காட்சிகளைக் காட்டும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘இன்றிரவு நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். தீயணைப்புத் துறையின் பணியைப் பாராட்டுகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் லாஸ்ஏஞ்சல்சிலிருந்து தப்பித்து சான்பிரான்சிஸ்கோவுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் ‘தமிழன்’ படத்திலும் நோரா ஃபதேஹி கார்த்தியுடன் ‘தோழா’ படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.