×

குழந்தை செல்வம் அருளும் அப்பர் சுவாமிகள் ஆலயம்

பண்ருட்டி அருகே திருவாமூர் கிராமத்தில் புகழனார், மாதினியார் என்னும் பெற்றோருக்கு திலகவதியார், மருள்நீக்கியார் என்ற இருவர் பிறந்தனர். இவர்கள் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். இவர்களுடைய இல்லமே இன்று திருக்கோயிலாக உள்ளது. திலகவதியாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பல்லவ மன்னனின் படைத்தளபதி போரில் உயிர் துறந்தார். தனது மகளின் திருமணம் தடைபட்டதால் புகழனார் சொல்ல முடியாத துயருக்கு ஆளானார். சிறிது நாளில் உயிர் துறந்தார். கணவன் சென்ற வழியிலேயே மாதினியாரும் இவ்வுலகை விட்டு நீங்கினார். திலகவதியாரும், மருள்நீக்கியாரும் செய்வதறியாது திகைத்தனர். இளமையில் பட்ட கடும் துன்பங்களால் மனம் வெறுப்புற்ற மருள்நீக்கியார் வேற்று சமயமாகிய சமண சமயத்தில் சேர்ந்து திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமண மதத்தினருடன் வசித்து வந்தார். மருள்நீக்கியார் சமண மதத்தில் சேர்ந்து தருமசேனன் என பெயரை மாற்றி கொண்டார்.

வயிற்றுவலி நீங்கியது

மருள்நீக்கியார் வேறு மதத்தில் சேர்ந்ததை அறிந்த திலகவதியார் திருஅதிகை (திருவதிகை) வந்து வீரட்டானேஸ்வரர் கோயிலில் தொண்டுகள் செய்து வந்தார். எப்படியாவது தனது தம்பியை சைவ சமயத்துக்கு மீண்டும் திரும்புவதற்கு இறைவனிடம் நாள்தோறும் பிரார்த்தனை செய்து வந்தார். சில நாட்கள் கழிந்த பின் திருப்பாதிரிபுலியூரில் இருந்த தருமசேனருக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது.
ஒரு நாள் அதிகாலையில் திருவதிகைக்கு சென்ற மருள்நீக்கியார் தனது சகோதரி திலகவதியாரின் திருவடிகளில் வீழ்ந்து தமது நோயை போக்கும்படி கதறினார். திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேஸ்வரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை (நமசிவாய) ஓதி திருவாளன் திருநீறு அளித்தார். அந்த திருநீற்றை வாங்கி நெற்றியில் பூசி திருவாயில் போட்டு கொண்டார். என்ன ஆச்சர்யம் கதிரவனை கண்ட பனிபோல் அவரது வயிற்று வலி மாயமாகி விட்டது

நாவுக்கரசு பட்டம்

வீரட்டானேஸ்வரரை வணங்கி முதன் முதலில் திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்ந்த சிவபெருமான் நாவுக்கரசு என்று பட்டம் கொடுத்தார். அது முதல் சமண சமயத்தை விட்டு நீங்கி சைவத்தையே உயிர் மூச்சாக கொண்டு உழவாரம் செய்து வந்தார். அதன் பிறகு பல்லவ மன்னர்கள் மருள்நீக்கியாரை சமண மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தனர். மருள்நீக்கியார் மறுத்ததால் பல்லவ மன்னர்கள் பல சித்ரவதைகள் செய்தார்கள். ஒரு கட்டத்தில் பல்லவ மன்னர்கள் சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறினார்கள். தமிழகத்தில் 1000க்கு மேற்பட்ட கோயில்களை கட்டி குடமுழுக்கு செய்தனர். சிவபெருமான் பல சோதனைகளை காட்டி மருள்நீக்கியாரை 81 வயதில் திருபுகலூர் என்ற ஊரில் அக்கினீஸ்வரன் கோயிலில் இறைவனோடு ஐக்கியமாக செய்தார்.

திலகவதியாரும் இறுதி மூச்சு வரை சுமார் ஐம்பது ஆண்டுகள் திருஅதிகை பெருமானுக்கு தொண்டு செய்து இறைவனடி சேர்ந்தார்.  மருள்நீக்கியாருக்கு அப்பர், திருநாவுக்கரசர், தர்மசேனர் ஆகிய பெயர்கள் உண்டு. இந்த கோயிலில் மூலவர் அப்பர் ஆவார். சித்திரை மாதம் சதய திருநாள் திருவிழா நடைபெறும். தந்தை, தாய் மற்றும் தமக்கைக்கு தனி சன்னதி உள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். தலவிருட்சமாக களரிவாகை மரம் உள்ளது. இது 1500 ஆண்டுகள் பழமையானது. களரிவாகை மரத்தின் இலையில் 6 சுவை, குணங்கள் உள்ளது. விஷ தன்மையை குறைக்கும் தன்மை கொண்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சிறப்புகள்:

வயிறு சம்மந்தமாக எந்த நோயாக இருந்தாலும் அபிஷேகம் செய்த விபூதியை உண்டால் வயிறு சம்மந்தமாக எல்லா நோய்களும் குணமாகும்.

செல்வது எப்படி?

பண்ருட்டியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் திருவாமூர் அப்பர் கோயில் அமைந்துள்ளது. ேபருந்து வசதி உண்டு.

Tags : Swamiji Temple ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்