×

திருவண்ணாமலையில் தீப விழா முடிந்தபின்னரும் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபவிழா முடிந்த பின்னரும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பகலில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்ச மூர்த்திகளும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23ம் தேதி நடந்தது.

அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதைக்காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். தீபம் முடிந்தும் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. தினமும் கார், பஸ், வேன்களில் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க வருகிறார்கள். இதனால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் தினமும் அலைமோதுகிறது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.

Tags : Devotees ,completion ,Annamalaiyar temple ,festival ,Thiruvannamalai ,Deepa ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் போலீஸ்...