கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் 4ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 23ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் உள்ள 41 அடி உயர தீபக்கம்பத்தில், 4 அடி உயரம் கொண்ட செம்பு கொப்பரையில் 750 லிட்டர் எண்ணெய் மற்றும் நெய் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்கு தேவையான தீப திரிகள், எண்ணெய், நெய் மற்றும் பூஜை பொருட்கள், விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சிவ.கே.என்.சரவணன், சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர். தீபத்திற்கு தேவையான எண்ணெய், நெய், பூஜை பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தலாம் என விழாக்குழுவினர் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.