×

திருநாவுக்கரசரை ‘அப்பர்’ என அழைத்த புண்ணிய கோயில்

திருநாவுக்கரசரை ‘அப்பர்’ என ஞானசம்பந்தபிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி ஜீவசமாதி அடைந்த தலம். இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம். இறைவன் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.

சக்தி பீடத்தில் 11வது பீடம்:

இத்தல விநாயகர் குணம் தீர்த்த விநாயகர். தெற்குப் பிரகாரத்தில் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளியுள்ள தனிக்கோயில் ஒன்று உள்ளது. இங்கு அஷ்ட பைரவர்களும் யோகாஸ்தனத்தில் உள்ளனர். சட்டநாதர்,  பைரவ சுவாமியின் மறு பதிப்பு, வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில், இங்கு எட்டுவித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, ‘தேய்பிறை  அஷ்டமி திதி மாலை வேளையில் சட்டநாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே’ என்கிறார் அகஸ்தியர். அட்ட பைரவருமோருருவாகி கிருட்ணபட்ச யட்டமியந்தியில் அருள் பரிபாலிக்க தொழுதிருப்பாருக்காததேது’’ என்கிறது, அகஸ்தியர் நாடி. இந்த கோயிலில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அஷ்ட பைரவர்களின் சன்னதியானது வெள்ளிக்கிழமை மட்டும்தான் திறப்பார்களாம்.

திருஞானசம்பந்தர்:  

திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் சம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம்... தன் தந்தையுடன் சீர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத ஹ்ருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, ”அம்மே அப்பா’ என்று அழுதார். இதைக் கண்ட இறைவன், கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்று தேவிக்குக் கட்டளையிட்டார்.

அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது. வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், பால் கொடுத்தது யார்? என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் தோடுடைய செவியன் எனும் திருப்பதிகம் பாடியருளி, சிவபார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார். அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்கு சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார். இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீர்காழிக்கு போதுமானது.

ஊழிக்காலத்தில், இப்பேரண்டமே அழியும் போது எவ்வித அழிவும் ஏற்படாது நிலைத்து இருந்த இத்தலத்திற்கு இறைவனும், இறைவியும், பிரணவத்தையே தோணியாகக் கொண்டு, அனைத்து ஜீவராசிகளின் வித்துக்களுடன் எளுந்தருளி, இதனையே மூலாதார சேத்திரமாகக் கொண்டு, பிரம்மா முதல் அனைத்து ஜீவராசிகளையும் படைத்ததாகக் கூறுவர். இதிலிருந்து இத்தலத்தின் தொன்மையை நாம் அறியலாம். அது முதல் பல பிரம்மாக்கள் தோன்றி தங்கள் படைத்தல் தொழில் எவ்வித இடையூறின்றி நடைபெற, இறைவனை வழிபட்டு வருவதால் இத்தலத்திற்கு பிரம்மபுரம் என்ற பெயரும் உண்டு. அதனால் இத்தலத்து இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், இறைவிக்கு திருநிலைநாயகி என்ற பெயரும் உண்டு. பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால் அமைந்துள்ள கட்டுமலைக்கு ஒரு புராண வரலாறும் உண்டு.

காலவித்து என்னும் மன்னனின் கவலையைப் போக்க கைலையில் கடுந்தவம் புரிந்த உரோமச முனிவர் என்பவர் தென்னாட்டு மக்களுக்காக ஒரு மலைச் சிகரத்தை உருவாக்கி அதில் இறைவனும், இறைவியும் நிலையாக வீற்றருல வேண்டும் என்று பிரார்த்தித்தார். ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் ஏற்பட்ட போரில், கைலாய மலையின் சிகரம் பல துண்டுகளாகப் பெயர்ந்து விழுந்ததாகவும் அதில் ஒன்றினை 20 பறவைகள் இங்கு கொண்டு வந்து வைத்ததாகவும் கூறுவர். இதனை நேரில் தரிசித்த மன்னன், அம்மலை பின்னர் மறைந்து நிற்க, மன்னன் அதனை போன்றே அவ்விடத்தில் கட்டுமலை ஒன்று கட்டுவித்தான். 20 பறவைகள் தாங்கியது போலவே அமைத்துள்ளான்.

முனிவருடைய வேண்டுதல்படி இறைவனும் இறைவியும், தற்போது அம்மலையில் நிலையாக வீற்றிருப்பவர்களே, தோணியப்பர் ஆகிய உமா மகேஸ்வரரும் பெரிய நாயகியாகும் ஆவர். இங்கு உமா மகேஸ்வரரே குருமூர்த்தமாக விளங்குகிறார். பெரும்பாலும் எல்லாத் தலங்களிலும் இறைவன் தன் கைகளில், தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மான், மழு , ஆகியவற்றையே தன் ஆயுதங்களாக வைத்திருப்பார். ஆனால் தாருகாவனத்து முனிவர்கலை திருத்துவதற்காக இறைவன் கூத்து ஆடிய காலத்திற்கும் முற்பட்ட தலம் இது என்பதால் தோணியப்பர் கைகளில் எவ்வித ஆயுதங்களும் கிடையாது.

குரு, லிங்க, சங்கம மூர்த்தங்கள்:


இம்மூன்று மூர்த்தங்களும் தனித்தனியே பல ஆலயங்களில் எழுந்தருளியுள்ள போதிலும், இத்தலத்தில் மட்டுமே இம்மூன்று மூர்த்தங்களும் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர்.

குருமூர்த்தம்:

இம்மலைமீது எழுந்தருளியுள்ள தோணியப்பரே குருமூர்த்தம் ஆவார். இவரே திருஞானசம்பதருக்கு ஞானப்பால் அருளி ஞான உபதேசம் செய்த குரு ஆவார்.

இலிங்க மூர்த்தம்:

இத்தலத்தில் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்கமூர்த்தம் ஆகும். இது ஆதி பிரம்மனால் ஸ்தாபிக்கப்பட்டு பல பிரம்மாக்களால்
வழிபடப்பட்டு வருவதாகும்.

சங்கம மூர்த்தம்:

திருத்தோணி மலை என்ற பெயர் கொண்டு விளங்கும் மலையுச்சியில் சட்டைநாதர் என்ற திருநாமத்தோடு விளங்குபவரே சங்கமமூர்த்தம். இரணியனது உயிரை மாய்த்த நரசிம்மத்தைப் பிளந்து, அதன் எலும்பை கதையாகவும், தோலைச் சட்டையாகவும் அணிந்து விளங்குகிறார். இவரை பைரவமூர்த்தம் என்பர். மாவலி சக்ரவர்த்தியிடம் குள்ள வடிவமாகச் சென்ற மகாவிஷ்ணு மூன்றடி மண்யாசித்து விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்து, மூன்றாவது அடியை அவனது தலையில் வைத்து அழுத்தி பாதாள உலகிற்கு அனுப்பிய பின்னர், செருக்குடன் திரிந்ததால் அவரை வீழ்த்தி அவரது எலும்பையும் தோலையும் சட்டைநாதர் தான் அணிந்து கொண்டதாகவும் கூறுவர். விஷ்ணுவினுடைய தோலையும் எலும்பையும் அணிந்து கொண்டதால், சட்டைநாதர், வடுகநாதர், ஆபதுத்தாரனர் என பல திருநாமங்களோடு விளங்குகிறார்.

வெள்ளிக்கிழமைதோறும் அர்த்த யாமத்தில சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது  ஆண்கள் மேற்சட்டை அணியாமலும் பெண்கள் பூச்சூடாமலும் கலந்துகொள்வர். இவருக்கு புனுகுச்சட்டம் சாத்தி வடை பாயசம் நிவேதிப்பர். நான்குபுறமும் கோபுரங்களுடன் உயர்ந்த திருச்சுற்று மதில்களுடன் விளங்குகிறது. சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் திருஞான சம்பந்தர் ஆலயம் அமைந்துள்ளது. அம்மையப்பருக்கு நடுவில் முருகன் எழுந்தருளியிருக்கும் சோமாஸ்கந்த வடிவில் இது அமைந்துள்ளது.

கோயிலின் அமைப்பு:  

சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனுக்கு 3 சந்நிதிகள் இருக்கின்றன. கோயிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோயிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்கம் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்ணத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோயிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோயிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன. இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார்.

கோயிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை. இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நோக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. இந்தச் சட்டநாதர், முத்துச் சட்டநாதர் என்ற பெயரோடு, வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவ உருவில் காட்சி தருகிறார். தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம்  இதுதான். இவர் சீர்காழி இறைவன் மேல் 67 பதிகங்கள் பாடியுள்ளார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 2ம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது.

சித்திரை பிரம்மோற்சவத்தில் 2ம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா நடைபெறும். ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில், அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில், அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில்தான். சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோரின் பாடல்பெற்ற சிறப்புமிக்க தலம் என்ற சிறப்பும் இவ்வாலயத்திற்கு உண்டு. நம்பியாண்டார் நம்பி, பூந்துருத்தி காடநம்பி, பட்டினத்தார். ராமலிங்க அடிகளார் ஆகியோரும் இத்தல இறைவனை நினைத்து பாடல் பாடியுள்ளனர். பட்டினத்து அடிகள் மும்மணிக்கோவை இயற்றியுள்ளார். இது பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தன் திருப்புகழ் பாடலில் பாடியுள்ளார்.

சோழ, பல்லவ, விஜயநகர கல்வெட்டுகள் என மொத்தம் நாற்பத்தாறு உள்ளது. சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகப் பிரசித்தி பெற்றது. அதில் 2ம் நாளன்று திருமுலைப்பால் உற்சவம் நடைபெறுகிறது. திருஞானசம்பந்தருக்கு பெரியநாயகி அம்மையார் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி ஆகும். அப்போது திருஞானசம்பந்தருக்கு நிவேதித்த ஞானப்பாலை அங்கு கூடியுள்ள திரளான மக்களுக்கு வழங்குவர். அப்பாலையுண்டவர் திரும்பவும் முலைப்பாலுண்ணாப் பேறு பெறுவர் என்பது ஐதீகம் காலை 6 மணி முதல் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

Tags :
× RELATED வாழ்க்கையின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!