×

மத மோதலை தூண்டும் பேச்சு; மதுரை ஆதீனம் முன்ஜாமீன் மனு: ஜூலை 14ல் விசாரணைக்கு வர வாய்ப்பு

சென்னை: மதமோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த மே 2ம் தேதி காலை மதுரை ஆதீனம் வந்தபோது உளுந்தூர் பேட்டை பகுதியில் அவரது கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்படுத்த முயன்றதாக புகார் எழுந்தது. மேலும், மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாகவும், இதில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, விபத்து ஏற்படுத்தியவர்கள் தாடி வைத்திருந்ததாகவும் குல்லா அணிந்திருந்ததாகவும் புகார் தெரிவித்தார். நீண்ட தொலைவு துரத்தி வந்து சாலை தடுப்புகளை உடைத்து தங்கள் கார் மீது மோதியதாகவும் குற்றம்சாட்டினார். மதுரை ஆதீனத்தின் புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டது. அதில் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக செல்வதும் இடதுபுறத்தில் இருந்து மற்றொரு கார் கட்டுப்பாடான வேகத்தில் வந்து கொண்டிருந்ததும் பதிவாகி இருந்தது. மேலும் கட்டுப்பாடான வேகத்தில் வந்த காரை மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக கடப்பதும் இதையடுத்து கட்டுப்பாடான வேகத்தில் வந்த கார் பிரேக் போடப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் அம்பலமானது.

உண்மை வெளிவந்த நிலையில் ராஜேந்திரன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், மதுரை ஆதீனத்தின் கருத்துகள் மாற்று மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதோடு சைவ சமயத்தினரின் உணர்வுகளையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பான தகவல்களை மதுரை ஆதீனம் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் புகாரில் குற்றம்சாட்டி இருந்தார். இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை ஆதீனத்தின் கருத்துகள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல், பொது தீமைக்கு வழிவகுக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜூன் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் மதுரை ஆதீனம் ஆஜராகவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் ஜூலை 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் ஆஜராகவில்லை.

வழக்கில் 2 முறை சம்மன் அனுப்பியும் மதுரை ஆதீனம் ஆஜராகாத நிலையில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை ஆதீனம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.

The post மத மோதலை தூண்டும் பேச்சு; மதுரை ஆதீனம் முன்ஜாமீன் மனு: ஜூலை 14ல் விசாரணைக்கு வர வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Addinam Mujamin ,Chennai ,Madurai Adinam ,Chennai Primary Sessions Court ,Vegetarian Ideological Conference ,Katangolathur, Chennai ,
× RELATED வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு...