அண்ணாநகர், ஜூன் 7: மும்பையில் இருந்து 2 பேர் போதை மாத்திரைகளை ரயில் மூலமாக கடத்தி வந்து, திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் ரயில் நிலையங்களில் இறங்கி, அங்கு போதை மாத்திரைகளை பிரித்து கொண்டு தப்பி செல்ல இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் ரயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் மாறுவேடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மும்பையில் இருந்து திருத்தணிக்கு வந்த ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் யாரும் சிக்கவில்லை.
பின்னர் அரக்கோணம் வந்த மும்பை ரயிலில் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்துக்கு இடமாக வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், மதுரவாயல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிரகாஷ் (எ) சூர்யா (25), ஆவடியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் மாதேஷ் (21) என்பது தெரிய வந்தது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தபோது, அடிக்கடி ேபாலீசில் சிக்கி, பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதற்கு மாற்று வழியாக, மும்பைக்கு சென்று குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தோம். நாங்கள் போலீசில் பிடிபடாமல் இருப்பதற்காக போதை மாத்திரைகள் கேட்டவர்களை திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வரவழைத்து, அங்கேயே பிரித்து கொடுத்து விடுகிறோம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மாத்திரை ரூ.400 எனவும், மொத்தமாக வாங்குபவர்களுக்கு சலுகை விலையிலும் விற்பனை செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.