×

4 ஆண்டுகால மகத்தான சாதனைகளுக்காக ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு திசையெட்டும் போற்றும் வண்ணம் பாராட்டு’: ஒன்றிய அரசு, பல்வேறு நிறுவனங்கள், பத்திரிகைகள் விருது மழை

சென்னை: திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டுகால மகத்தான சாதனைகளால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு திசையெட்டும் போற்றும் வண்ணம் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கும் நிலையில், அவர் புகழ் அவனியெங்கும் எதிரொலிப்பதை காண முடிகிறது. தொலைநோக்கு சிந்தனைகளுடன் திட்டமிட்டு வகுத்து நடைமுறைப்படுத்திவரும் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன. காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம், முதலானவை இந்திய நாடு கடந்து, அயல் நாடுகளிலும், ஐ.நா. மன்றத்திலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் அச்சுறுத்திய கொரோனா, அடுத்தடுத்து நிகழ்ந்த புயல் மழை – வெள்ள கொடுமைகள், கரம் கொடுத்து உதவ வேண்டிய ஒன்றிய அரசின் பாராமுகம், அது அளிக்க வேண்டிய நிதியையும் அளிக்க முடியாதென நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம் அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டு மக்களை எல்லா வகையிலும் காத்து – எல்லாருக்கும் எல்லாம் என்பதைத் தத்துவமாகவே வடித்துத் திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டினை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளார். இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் எனப் பாராட்டப்பட்டபோது, எனக்கு புகழோ, பாராட்டோ தேவையில்லை; தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் என புகழப்படுவதையே விரும்புகிறேன்; அதுவே எனது ஆசை என்று கூறி பாடுபட்டு அந்த இலக்கை இன்று அடைந்து புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மகளிர், மாணவர்கள் தொழிலாளர்கள், தொழில் முகவர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். பத்திரிகைகள் பாராட்டுகின்றன; ஊடகங்கள் போற்றுகின்றன. பிற மாநில அரசுகள் பாராட்டுகின்றன. நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன. இத்தனைக்கும் மேலாக ஒன்றிய அரசே தமிழ்நாட்டு அரசை பாராட்டி ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளது. அவையெல்லாம் தமிழ்நாட்டிற்கும் நமக்கும் பெருமையையும்.

பெருமிதத்தையும் ஏற்படுத்தும். அந்த ஒன்றிய அரசின் பாராட்டு பட்டியல் விவரம் பின்வருமாறு:

  • முதல்வரிடம் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institution கடந்த 2021ம் ஆண்டு நவ.3ம் தேதி வழங்கிய ISO 270001 : 2013 சர்வதேச தர சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அதுல்ய மிஸ்ரா, டெல்லியில் கடந்த நவ.30ம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் FICCI Turf 2024 – 14வது சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில் 2024ம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு வழங்கிய விருதை கடந்த 2024ம் ஆண்டு டிச.4ம் தேதி காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசால் கடந்த 2021ம் ஆண்டு டிச.6ம் தேதி வழங்கப்பட்ட விருது.
  • ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை கடந்த 2021ம் ஆண்டு டிச.8ம் தேதி மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்காக வழங்கிய தேசிய விருது.
  • கடந்த 2021ம் ஆண்டு டிச.13ம் தேதி தேசிய விருதுகள்.
  • சிறந்த நீர் மேலாண்மைக்காக கடந்த 2022ம் ஆண்டு தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கான விருது.
  • மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஏற்றுமதி நிறுவனங்களின் சேவையை பாராட்டி குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கடந்த 2022ம் ஆண்டு ஏப்.25ம் தேதி வழங்கிய சிறந்த ஏற்றுமதியாளர் விருது.
  • தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டின் 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் கடந்த 2022ம் ஆண்டு மே.11ம் தேதி வழங்கிய விருது.
  • மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் என கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி வழங்கப்பட்ட ஒன்றிய விருது
  •  இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 112 மாவட்டங்களில் ஒன்றாக குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்காக விருதுநகர் மாவட்டத்தின் சிறந்த பங்களிப்பிற்கு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி வழங்கப்பட்ட தேசிய அளவிலான முதல் பரிசு.
  • சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கு கடந்த 2022ம் ஆண்டு அக்.2ம் தேதி வழங்கப்பட்ட குடியரசு தலைவர் விருது.
  • இந்தியாவில் தூய்மையை பராமரிப்பதில் சிறந்து விளங்கிய தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் மூன்றாவது பரிசாக கடந்த 2022ம் ஆண்டு அக்.2ம் தேதி தமிழ்நாடு நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என்.நேரு குடியரசு தலைவர் வழங்கிய விருது.
  • ஜல்சக்தி திட்டத்தினை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி முதலிடம் பெற்றமைக்காக கடந்த 2022ம் ஆண்டு அக்.2ம் தேதி குடியரசு தலைவர் வழங்கிய தேசிய விருது.
  • ஒன்றிய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் – சிறந்த உள்நாட்டு மீன் உற்பத்தி மாவட்டமாக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்டதிற்கு கடந்த 2022ம் ஆண்டு டிச.13ம் தேதி வழங்கப்பட்ட விருது.
  • ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வழங்கப்பட்ட இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சகத்திற்கான பட்வா சர்வதேசப் பயண விருது.
  • கடற்கரை முகப்பு பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சக விருது.
  • காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி – வாரணாசியில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்.6ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்.
  • காகிதம் இல்லா சட்டமன்றத் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியமைக்காக ஒன்றிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியன்று வழங்கிய விருது.
  • புதுடெல்லி பிரகதி மைதானத்தில் கடந்த 2023ம் ஆண்டு நவ.20ம் தேதி நடைபெற்ற உலக உணவு திருவிழாவில் – பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருது.
  • திருவைகுண்டம் அணைக்கு உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புக்காக 2023ம் ஆண்டு நவ.21ம் தேதி வழங்கப்பட்ட சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணைய விருது.
  • டெல்லியில் குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி வழங்கப்பட்ட தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்ற விருது.
  • ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய அளவில் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறன் கொண்ட தருமபுரி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கடந்த 2024ம் ஆண்டு ஆக.14ம் தேதி வழங்கிய முதல் பரிசு.
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ஐ.நா.அமைப்பின் 2024ம் ஆண்டிற்கான யுனைடெட் நேஷன், இண்டர்ஏஜென்சி டாஸ்க் போர்ஸ் விருதை முதல்வரிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
  • ஐ.நா. பிரகடனப்படி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய அளவில் சிறந்த வங்கி சேவைக்காக கடந்த 2024ம் ஆண்டு நவ.26ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு கூட்டுறவு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் வழங்கிய விருது.
  • கடந்த 2024ம் ஆண்டு நவ.29ம் தேதி புதுடெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 43-வது இந்திய பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சியின், “2047-இல் இந்தியா” என்ற கருப்பொருள் விளக்கக் காட்சிப்படுத்தலைச் சிறப்பாக அமைத்தமைக்காக தமிழ்நாடு அரங்கிற்கு வழங்கப்பட்ட மூன்றாம் விருது.
  • திருவாரூர் முத்துப்பேட்டை காவல் நிலையம், 2024ம் ஆண்டில் சிறந்த காவல் நிலையம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கிய விருது.
  • 2024ம் ஆண்டிற்கான சிறந்த ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை தேசிய விருது.

இவைபோல, ஒன்றிய அரசு வழங்கிய பல்வேறு விருதுகளுடன் தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டிப் பல விருதுகளை வழங்கியுள்ளன. இவைமட்டுமல்லாமல் பல்வேறு பத்திரிகை நிறுவனங்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியை பாராட்டி மிகப்பல விருதுகளை வழங்கியுள்ளன. மேலும், திராவிட மாடல் அரசு நான்காண்டு கால ஆட்சியில் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைகளுக்காக இதுவரை எந்த முதலமைச்சரும் பெற்றிராத வண்ணம் திசையெட்டும் போற்றிப் பாராட்டும் வண்ணம், ஒன்றிய அரசும், பல்வேறு நிறுவனங்களும், பத்திரிகைகளும் பாராட்டி வழங்கியுள்ள விருதுப் பட்டியலை காணும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக சிறந்த நிர்வாக ஆளுமை மிகுந்தவர் என பலரும் மகுடம் சூட்டுவது நமது தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள தனி பெரும் சிறப்பாகும்.

The post 4 ஆண்டுகால மகத்தான சாதனைகளுக்காக ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு திசையெட்டும் போற்றும் வண்ணம் பாராட்டு’: ஒன்றிய அரசு, பல்வேறு நிறுவனங்கள், பத்திரிகைகள் விருது மழை appeared first on Dinakaran.

Tags : Madhalvar Mu. K. ,Stalin ,Union ,Chennai ,MLA ,First Minister ,Tamil ,Nadu ,Mu. K. ,Principal M.U. ,K. ,
× RELATED தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை...