
* ரூ.40 கோடியில் பயிற்சி மையம்
சென்னை: தமிழகத்தில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 மாணவர்களுக்கு நாளை சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும், 500 மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய வகையில் ரூ.40 கோடி செலவில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் வில்லிவாக்கம் வெற்றிஅழகன் (திமுக) பேசும்போது, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் பயிற்சி பெற்றவர்கள், அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் 50 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள் என்று பாராட்டு ெதரிவித்து பேசினார். அவர் பேசி முடித்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம். அந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, தற்போது வெளியான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.
2016ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிகமான தமிழ்நாட்டு மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை மாறி 2021ல் வெறும் 27 மாணவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதை கவனத்தில் வைத்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டது. குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகக்கூடிய ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கினோம். மேலும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு ரொக்கமாக 25 ஆயிரம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கினோம். அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் ‘அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்தின்’ மூலமாக இந்த மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றன. நாம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் பயனாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 மாணவர்கள் பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், இவர்களில் 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுப் பயனடைந்திருக்கக் கூடியவர்கள். தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும். அதற்காக சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் ரூ.40 கோடி செலவில் அமைக்கப்படும். அதுமட்டுமல்ல; இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சியை நாளை மறுதினம் (நாளை) பயிற்சி பெற்ற அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்தில் நடத்திடவும், அதில் நான் கலந்துகொள்ளவும் இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்தில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 மாணவர்களுக்கு நாளை சென்னையில் பாராட்டு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.
