×
Saravana Stores

சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

சென்னை : ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு ஒன்றில் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாக தெரிவித்திருந்தார். பேரவைத் தலைவரின் இந்த பேச்சு அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி பேரவைத் தலைவர் மு.அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரான ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் “புகார்தாரர் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை,”என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

The post சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை...