×
Saravana Stores

பயங்கரவாத தாக்குதல்; வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது: பிரியங்கா காந்தி!

டெல்லி: குல்மார்க்கில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தில் இருந்த 2 வீரர்கள் மற்றும் ராணுவ சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குல்மார்க் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது X தள பதிவில் வெளியிட்டுள்ளதாவது; ஜம்மு-காஷ்மீர் குல்மார்க்கில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

தாக்குதலில் 2 ராணுவ சுமை தூக்கும் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ஒரு நாகரீக சமூகத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது, இதற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது என்று பதிவிட்டுள்ளார்.

The post பயங்கரவாத தாக்குதல்; வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது: பிரியங்கா காந்தி! appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Delhi ,Gulmarg ,Bodapader ,Jammu and Kashmir ,
× RELATED வயநாடு மக்கள் என் இதயத்தில்...