×
Saravana Stores

கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டையால் அடித்து ரவுடி படுகொலை: 2 வாலிபர்கள் கைது

சென்னை: திருநின்றவூர், நடுக்குத்தகை, கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் (21), தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். பி கேட்டகிரி ரவுடியான இவர் மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று மதியம் வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட் (32) என்பவரின் மனைவி அனுசியா என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துசென்று, இறந்த ரியாஸின் நண்பரான ஷியாம் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் ராபர்ட் மற்றும் அவரது நண்வர் ஜேம்ஸ் (38) ஆகிய இருவரும் நடுக்குத்தகை, பால்வாடி தெருவில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரியாஸ், பயாஸ் மற்றும் ஷியாம் ஆகியோர் வந்துள்ளனர். இதில் அனுசியாவுடன் ஷியாம் இருப்பது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த ராபர்ட் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் ரியாஸ் உள்ளிட்ட மூவரையும் துரத்திக்கொண்டு ஓடியபோது, ரியாஸ் அவரது வீட்டின் பின்புறம் தடுமாறி விழுந்துள்ளார். இதையடுத்து, ராபர்ட் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் அவரை கல் மற்றும் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ரியாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார், ராபர்ட் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

The post கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டையால் அடித்து ரவுடி படுகொலை: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,CHENNAI ,Riyas ,Gangai Amman Koil Street, Nadukuthagai, Thiruninnavur ,Thiruninnavur ,
× RELATED பிறந்த நாள் பார்ட்டி வைக்க வழிபறி:...