×
Saravana Stores

கார் மீது சொகுசு பஸ் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: திருமண வரவேற்புக்கு சென்றபோது சோகம்

திருமலை: திருப்பதி அருகே கார் மீது சொகுசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். திருமண வரவேற்புக்கு சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் பிரேம்குமார் (51). இவர் இன்று காலை தனது குடும்பத்தினர் 6 பேருடன் திருப்பதியில் நடக்கும் உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக காரில் சென்றுகொண்டிருந்தார். திருப்பதி அருகே உள்ள அன்னமய்யா மாவட்டம் ரயில்வே கோடூர் அருகே வந்தபோது எதிரே திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி சென்ற சொகுசு பஸ் எதிர்பாராமல் இவர்களது கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.

காரில் பயணம் செய்த பிரேம்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 6 பேரை சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர். பின்னர் அவர்களை திருப்பதி அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரேம்குமாரின் உறவினர்களான வாசவி (48), சுஸ்சரிதா (45) ஆகிய 2 பேர் அடுத்தடுத்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து விபத்தில் சிக்கி சேதமான காரை போலீசார், பொக்லைன் மூலம் அகற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கார் மீது சொகுசு பஸ் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: திருமண வரவேற்புக்கு சென்றபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Premkumar ,AP ,Kurnool ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு?