×
Saravana Stores

போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது

அகமதாபாத்: குஜராத்தின் காந்தி நகரை சேர்ந்தவர் மோரீஸ் சாமுவேல் கிறிஸ்டியன். இவர் போலி தீர்ப்பாயம் நடத்தி பல்வேறு வழக்குகளை தீர்த்துவைத்து மோசடி செய்து வந்துள்ளார். சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலம் தொடர்பான வழக்குகளின் மனுதாரர்களை தனது வலையில் சிக்க வைக்கும் இவர், நீதிமன்ற தீர்ப்பாயத்தின் நீதிபதியாக தன்னை கூறிக்கொண்டு அவர்களை நம்ப வைத்துள்ளார். பிரச்னையை தீர்ப்பதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்று மோசடி செய்துள்ளார்.

இதற்காக இவர் தனது அறையை நீதிமன்றம் போலவே அமைத்துள்ளார். மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை நடத்துவது, உத்தரவிடுவது என்று நீதிபதி போன்று நடித்து வந்துள்ளார். மனுதாரர்கள் யாராவது வரும்போது அவரது கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்கள் போலவும், வழக்கறிஞர் போலவும் நடித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இவர் அரசு இடம் தொடர்பான விவகாரத்தில் மனுதாரருக்கு ஆதரவாக போலி நீதிமன்ற உத்தரவை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கு மாவட்ட ஆட்சியரின் கீழ் இருக்கும் அரசு நிலம் தொடர்பானதாகும். மனுதாரர் இந்த இடத்தின் மீது உரிமை கோரி இருந்தார். சம்பந்தப்பட்ட இடம் தொடர்பான வருவாய் பதிவேடுகளில் மனுதாரரின் பெயரை பதிவேற்றம் செய்யும்படி ஆட்சியருக்கு போலி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை செயல்படுத்த மோரீஸ் மற்றொரு வழக்கறிஞர் மூலமாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை பார்த்த நீதிமன்ற பதிவாளர், ஹர்திக் தேசாய், போலி நீதிமன்ற உத்தரவு குறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலி நீதிபதி மோரீசை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : AHMEDABAD ,Maurice Samuel Christian ,Gandhi Nagar, Gujarat ,City Civil Court ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய நபரால் பரபரப்பு!!