×

திருத்தணியில் பெரும் பரபரப்பு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக நூதன முறையில் ₹1 கோடி மோசடி:  தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பெண்கள்  கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது

திருத்தணி, அக். 17: வேலையில்லா இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி ₹1 கோடி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி உட்பட 3 பேரை திருத்தணி போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சென்னை பைபாஸ் சாலையில் வாடகை கட்டிடத்தில் டிரான்ஜ் இந்திய என்ற பெயரில் தனியார் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.

அந்த நிறுவனம் படித்து வேலையில்லா இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவர்ச்சியான விளம்பரம் மூலம் கவர்ந்து ₹10,800 வீதம் பணம் பெற்றுக் கொண்டு சில அழகு பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அப் பொருட்கள் உபயோகப்படுத்தி மற்றவர்களை உறுப்பினர்களாக சேர்த்தால், ஒருவருக்கு கமிஷனாக ₹500 வழங்கப்படும் என்று நம்பவைத்துள்ளனர். கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களுக்கு தெரிந்தவர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். இதனை நம்பி படித்து வேலையில்லா இளம் பெண்கள், இளைஞர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

இருப்பினும் நிறுவனம் கூறிய படி வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தரவில்லை என்றும், புதியவர்கள் சேர்த்ததிற்கு கமிஷன் வழங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதனால், பணம் வழங்கி ஏமார்ந்தவர்களில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் திருத்தணியில் உள்ள அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் ஏற்படுத்தி தருவதாக நம்பவைத்து நூதன முறையில் மோசடி செய்ததாக பெண்கள் குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து நிறுவன மேலாளர் ரகு மற்றும் அங்கு பணியாற்றி வருபவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உரிய அனுமதியியுடன் நிறுவனம் நடத்தவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிந்ததால், அலுவலக மேலாளர் மற்றும் பணியாளர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிய அனுமதியின்றி பணம் மோசடியில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டு திருத்தணி பூங்கா நகரை சேர்ந்த சார்ந்த ரகு(29) அவரது மனைவி சத்யா(30) மற்றும் வேளஞ்சேரியைச் சேர்ந்த நந்தினி(21) ஆகிய மூன்று பேரும் மீது இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்கு பதிவு செய்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக நம்பவைத்து வேலையில்லா இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றிய சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருத்தணியில் பெரும் பரபரப்பு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக நூதன முறையில் ₹1 கோடி மோசடி:  தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பெண்கள்  கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,
× RELATED திருத்தணி கவுன்சிலர் தாக்கப்பட்ட...