×

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்று வந்த சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்று வந்த சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் ஒரு மாதமாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், சிறு, குறு, நடுத்தரதொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள்.

இப்பேச்சு வார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு. வேலை நிறுத்தத்தை கைவிட்டு. தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.
இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள்.

The post காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்று வந்த சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Samsung ,Kanchipuram ,Customs ,Kanchipuram Customs House ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு