×

ஓரணியில் நிற்போம் – பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம்: துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

சென்னை: சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையை அடுத்து மழைநீர் வடிவதை உறுதிசெய்வது, தற்காலிகத் தங்குமிடங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, உணவு, பால், பிரெட் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது என இப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சீரிய முறையில் மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.

முதலமைச்சர் – நான் – அமைச்சர்கள் – சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி மழைப் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மழைநீர் வடிவதை உறுதிசெய்வது, தற்காலிகத் தங்குமிடங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது – உணவு – பால் – பிரெட் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது என இப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், கழகத்தின் முதன்மையான அணியான திமுக இளைஞரணி சார்பிலும் நம் நிர்வாகிகள் பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருவதை நான் அறிவேன்.

மழை இடைவிடாது பெய்வதாலும், வானிலை எச்சரிக்கை தொடர்வதாலும், தொடர்ந்து களத்தில் நின்று மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிட வேண்டிய பொறுப்பு இளைஞர் அணியின் ஒவ்வொரு நிர்வாகிக்கும் – உறுப்பினர்களுக்கும் உள்ளது.

ஆகவே, மழைக்கால நிவாரணப் பணிகளை மாவட்ட – மாநகர – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – வார்டு – ஊர்க்கிளை அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் – இன்னும் வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கைகளைக் கழக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து நிறைவேற்றித் தரும் பணியை இளைஞர் அணியினர் செய்து கொடுக்கலாம். அதேபோல, அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாகச் செயல்படுவது அவசியம்.

மேலும், தமிழ்நாடெங்கும் தன்னார்வலர்கள் மழைக்கால நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நம் இளைஞரணியினர் துணைநின்று வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இளைஞர் அணி நிர்வாகிகளின் மழைக்கால நிவாரணப் பணிகளை மாநிலத் துணைச் செயலாளர்கள் ஒருங்கிணைப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

The post ஓரணியில் நிற்போம் – பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம்: துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Deputy Prime Minister ,Udayanithistalin ,Chennai ,Tamil Nadu ,Deputy ,
× RELATED ரெட் அலெர்ட் எச்சரிக்கை: சென்னை உள்பட 4...