×

குமரகிரி ஏரிக்குள் மூழ்கிய வாலிபர்

சேலம், அக்.8: சேலம் அம்மாபேட்டை குமரகிரி ஏரிக்குள் போதையில் கோணப்புளியங்காய் பறிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கினார். அவரை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். சேலம் அம்மாபேட்டை வைத்திதெருவை சேர்ந்தவர் மாதையன் (34), கூலி தொழிலாளி. இவர் தனது இரண்டு நண்பர்களுடன் காரைக்கால் சென்று விட்டு நேற்றுமுன்தினம் ஊர் திரும்பினார். அப்போது மதுபாட்டில்களை வாங்கி வந்துள்ளனர். நேற்று காலை அம்மாபேட்டை குமரகிரி ஏரிக்கு மாதையன் தனது நண்பர்களுடன் வந்தார்.

பின்னர் அவர்கள் அனைவரும் காரைக்காலில் இருந்து வாங்கி வந்த மதுவை அருந்தியுள்ளனர். அந்த நேரத்தில் போதையில் இருந்த மாதையன் ஏரிக்குள் இருக்கும் மரத்தில் கோணப்புளியங்காயை பறித்து வருவதாக கூறி சென்றார். அதன்படி அவர் ஏரிக்குள் சென்று கோணப்புளியங்காயை பறித்து விட்டு மீண்டும் திரும்பியபோது திடீரென நீரில் மூழ்கினார். அவரது சத்தம் கேட்டு சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியாததால் இதுபற்றி அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசாரும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் நீரில் மூழ்கிய மாதையனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 7 மணி வரையிலும் தேடினர். அவர் சகதியில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

The post குமரகிரி ஏரிக்குள் மூழ்கிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Kumaragiri lake ,Salem ,Salem Ammapet ,Mathayan ,Salem Ammapet Vaiditheru ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது