×

தந்தை, மகனுக்கு தலையில் திருப்புளி குத்து விவசாய நிலத்தில் பனை மரத்தை அகற்றியதில் தகராறு

வந்தவாசி, அக். 5: வந்தவாசி அடுத்த பாஞ்சரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார்(42). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே கிராமத்தில் உள்ளன. இவரது விவசாய நிலத்தில் உள்ள பம்ப்செட்டிற்கு வரும் மின் கம்பி அருகே உள்ள ஐயப்பனுக்கு (45) சொந்தமான நிலத்தில் பனைமரம் உள்ளது. இந்த பனை மரம் மின் கம்பி மீது படுவதால் சுகுமார் பம்ப்செட்டிற்கான மின்சாரம் அடிக்கடி தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சுகுமார் பனை மரத்தினை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுகுமார் அவரது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஐயப்பன் அவரது தந்தை ஏழுமலை ஆகியோர் சுகுமாரிடம் இதுகுறித்து கேட்டதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அப்போது ஐயப்பன் கையில் வைத்திருந்த திருப்புளியால் சுகுமாரை தலை மீது குத்தியுள்ளார். இதனை சுகுமாரின் தந்தை சுப்பிரமணி தடுத்தாராம். அவரையும் சரமாரியாக தாக்கி தலை மீது திருப்புளியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து சுகுமார் தேசூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சாய்ராம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஐயப்பன், அவரது தந்தை ஏழுமலை ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post தந்தை, மகனுக்கு தலையில் திருப்புளி குத்து விவசாய நிலத்தில் பனை மரத்தை அகற்றியதில் தகராறு appeared first on Dinakaran.

Tags : Vantavasi ,Sukumar ,Banjarai ,Vandavasi ,Aiyappan ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில்...