×

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் செய்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவருக்கு திருவொற்றியூர் நீதிமன்றம் பரிந்துரை

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கை விசாரிக்காமல் காலதாமதம் செய்து வந்த மணலி காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க திருவெற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த மதன் குமார் என்பவர் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய நண்பர் பிரேம் குமார் மூலம் அறிமுகம் ஆன சூளைமேட்டை சேர்ந்த குபேந்திரன் மற்றும் அவரின் மனைவி ஜெயா பாண்டிச்சேரியில் மது ஆலை தொடங்க திட்டமிட்டிருந்தனர். அவர்கள் மது ஆலையின் பங்குதாரராக என்னை சேர்த்து கொள்வதாக கூறி கடந்த 2017 ம் ஆண்டு 1 கோடியே 25 லட்ச ரூபாய் தன்னிடம் பெற்றனர். ஆனால் மது ஆலையும் தொடங்காமல், என்னுடைய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர்.

இது தொடர்பாக மணலி காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு குபேந்திரன் மற்றும் அவரின் மனைவி ஜெயா மீது புகார் அளித்தேன். இந்த விசாரணையில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அணுகிய போது, மணலி காவல் நிலையம் 3 மாதத்தில் இறுதி விசாரணை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டு 18 மாதங்கள் ஆகியும் மணலி இன்ஸ்பெக்டர் வழக்கில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மணலி இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு திருவெற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆர்.கிஷோத்குமார் ஆஜராகி வாதாடினார்.

காவல்துறை தரப்பில், பெரிய அளவில் பணப்பரிமாற்றம் இந்த வழக்கில் இருப்பதால் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் காலதாமதமாக செயல்பட்டதாக கூறி, அப்போதைய மணலி காவல் ஆய்வாளர் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளுர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரை செய்து வழக்கினை முடித்து வைத்தார்.

The post உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் செய்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவருக்கு திருவொற்றியூர் நீதிமன்றம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Magistrate ,Thiruvallur ,CHENNAI ,Thiruvettiyur Criminal Arbitration Court ,Manali Police Station ,Madan Kumar ,Kodunkaiyur, Chennai ,Thiruvottiyur court ,Tiruvallur ,Criminal ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கு ஆயுதங்களுடன் வந்த மாணவருக்கு ‘டிசி’: 3 மாணவர்கள் சஸ்பெண்ட்