×

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தது

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா – தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி யும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். தற்போது கண்டலேறு அணையில் 18 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம். மேலும் இந்த வருடம் தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை ஆந்திர அரசு வழங்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 19ம் தேதி காலை 11 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தி 1,200 கன அடியாகவும், நேற்று 1,300 கன அடியாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட்டை நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வந்தடைந்தது. அப்போது கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜானகி, செயற்பொறியாளர் தில்லைக்கரசி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டில் வினாடிக்கு 195 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் நேற்று மாலை 6 மணியளவில் 262 கன அடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது. தற்போது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் 16.85 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் 65 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

The post கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தது appeared first on Dinakaran.

Tags : Krishna ,Bundi Reservoir ,Kandaleru Dam ,Tamil Nadu ,Thiruvallur ,Andhra Pradesh Government ,TMC ,Setharam ,Krishna Water ,
× RELATED கண்டலேறு அணையில் இருந்து...