×

வழக்கு தொடர ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை வீட்டுமனை திட்டத்திற்கு பயன்படுத்தியதற்காக மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால், முதல்வர் சித்தராமையா மீது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதையடுத்து பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையாவுக்கு எதிராக டி.ஜே.ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனிடையே, வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்ததை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நாகபிரசன்னா, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் நீதிபதி நாகபிரசன்னா நேற்று அளித்த தீர்ப்பில், ‘முதல்வருக்கு எதிராக ஆளுநர் அளித்துள்ள அனுமதி சட்டப்படி செல்லக்தக்கது. முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், கீழமை நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

மேலும் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா உடனடியாக பதவி விலகக் கோரி பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காணும் வகையிலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்கும் இன்று மேலிட பொறுப்பாளர் ரனதீப் சுர்ஜிவாலா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. மேலும் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய சித்தராமையா தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

The post வழக்கு தொடர ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED சபரிமலை சன்னிதானத்தில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது