×

ஜார்கண்டில் ஊடுருவல் அதிகரிப்பு அமித்ஷா பேச்சுக்கு வங்கதேசம் கண்டனம்: இந்திய தூதருக்கு அவசர கடிதம்

புதுடெல்லி: ஜார்கண்டில் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக அமித் ஷாவின் பேசிய பேச்சுக்கு, வங்கதேச இடைக்கால அரசு பதிலடி கொடுத்து, இந்திய தூதருக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் பேசுகையில், ‘ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு, வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டவிரோத ஊடுருவலை (வங்கதேசத்தினர்) ஊக்குவிக்கிறது.

இவ்விசயத்தில் கவனம் செலுத்தப்படாவிட்டால், சட்டவிரோதமாக ஊடுருவிய நபர்கள் அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில் மாநிலத்தின் பெரும்பான்மை மக்களாக மாறிவிடுவார்கள். அவர்கள் நம்முடைய பெண்களை திருமணம் செய்து கொண்டு, நிலத்தையும், பழங்குடியினரின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அழித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் தூக்கி எறிவோம். ஊடுருவல் காரணமாக சந்தால் பர்கானாவில் மட்டும் பழங்குடியின மக்கள் தொகை 44 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது’ என்று கூறியிருந்தார்.

அமித் ஷாவின் கருத்துக்கு வங்கதேச இடைக்கால அரசு பதிலடி கருத்தை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ளது இந்திய தூதரிடம் அவசர கடித குறிப்பை ஒன்றையும் அனுப்பி உள்ளது. அதில், ‘எங்களது குடிமக்களுக்கு எதிராக இந்திய தலைவர்களின் பேச்சுகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.

இது தொடர்பாக இந்திய அரசையும் தொடர்பு கொண்டுள்ளோம். வங்கதேச மக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை இந்திய தலைவர்கள் தவிர்க்க வேண்டும். எனவே வங்கதேசத்தினருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை தவிர்க்குமாறு தனது தலைவர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஜார்கண்டில் ஊடுருவல் அதிகரிப்பு அமித்ஷா பேச்சுக்கு வங்கதேசம் கண்டனம்: இந்திய தூதருக்கு அவசர கடிதம் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Amit Shah ,Jharkhand ,New Delhi ,Bangladesh Interim Government ,Ambassador ,Union Home Minister ,Amish Shah ,Indian Ambassador ,Dinakaran ,
× RELATED ஜார்கண்டில் ஊடுருவல் அதிகரிப்பு;...