×

மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: சென்னை, மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 80வது வாரிய கூட்டம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கருத்தரங்கு கூடத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் இன்று நடந்தது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: சட்டமன்ற அறிவிப்பின்படி, சென்னை, மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படுகிறது.

வாரிய நலத்திட்ட பயன்களை அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக தற்போதுள்ள ஊதிய உச்சவரம்பு ரூ.25,000லிருந்து ரூ.30,000ஆக உயர்த்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் 30,134 தொழிலாளர்களுக்கு ரூ.12.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் திருமண உதவித் தொகை 3,264 பயனாளிகளுக்கு ரூ.4,27,75,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 902 வாரிசுதாரர்களுக்கு ரூ.2,87,85,000, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை 241 வாரிசுதாரர்களுக்கு ரூ.2,85,02,000 வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, திருமண உதவித் தொகையினை ரூ.10,000லிருந்து ரூ.20,000ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும், இயற்கை மரண உதவித் தொகையினை ரூ.25,000லிருந்து ரூ.50,000 ஆகவும், விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000லிருந்து ரூ.2,00,000ஆகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் வீரராகவராவ், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஜெகதீசன், நிதித்துறை துணைச் செயலாளர் தயாளன், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியச் செயலாளர் உமாதேவி, பூவிருந்தவல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, நிர்வாக தரப்பு பிரதிநிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Courtalam ,Valparai ,Minister CV Ganesan ,CHENNAI ,Minister ,CV Ganesan ,Tamil Nadu Labor Welfare Board ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குற்றாலம் கோயிலில் 48 வகை மூலிகைகளுடன்...