×

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

திருவொற்றியூர்: சென்னை துறைமுகத்தில் இருந்து லேப்டாப், நோட்பேடு உள்ளிட்ட ரூ.35 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்த கன்டெய்னரை டிரைலர் லாரியில் திருடிச்சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது, சென்னை துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிஐடிபிஎல் நிறுவனம் சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து கன்டெய்னரில் வரும் சரக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது இந்த நிறுவனத்தின் வேலை.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிறுவனத்திற்கு சீனாவில் இருந்து 40 அடி நீள கன்டெய்னரில் லேப்டாப், நோட் பேட் ஆகியவை கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இது கடந்த 7ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.
பெங்களூருவை சேர்ந்த நிறுவனம், கன்டெய்னரை ஏற்றி வர கடந்த 11ம் தேதி டிரைலர் லாரியை அனுப்பி உள்ளது. அதன் டிரைவர் சிஐடிபிஎல் நிறுவனத்தின் யார்டுக்கு சென்று பார்த்தபோது கன்டெய்னரை காணவில்லை. இதுதொடர்பாக தன்னை அனுப்பிய பெங்களூரு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை கையாளும் சிஐடிபிஎல் நிறுவன உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்த கன்டெய்னர் எங்கே போனது என விசாரித்தனர். இதுதொடர்பாக சிஐடிபிஎல் நிறுவன ஆபரேஷன் மேலாளர் பொன் இசக்கியப்பன் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கன்டெய்னர் ட்ராக்கிங் ரிப்போர்ட்டை ஆய்வு செய்தபோது, வேறொரு டிரைலரில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்த கன்டெய்னர் எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், சிஐடிபிஎல் நிறுவனத்தில் பணியாற்றும் இளவரசன் திருட்டு கும்பலுடன் சேர்ந்து இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து துறைமுகம் காவல் ஆய்வாளர் சிலம்பு செல்வன் தலைமையிலான போலீசார், திருவள்ளூர் மணவாளநகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கன்டெய்னரை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டிரைலர் லாரி உரிமையாளர் திருவள்ளூர் மணிகண்டன்(30), லாரிகளை ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஷ்(39), நெப்போலியன்(46), சிவபாலன்(46), திண்டுக்கல்லை சேர்ந்த முத்துராஜ்(46), டிரைலர் லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பால்ராஜ்(32) ஆகிய 6 பேரை கைது செய்து நேற்று காலை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிஐடிபிஎல் நிறுவன ஊழியர் இளவரசன், இடைத்தரகர் சங்கரன், டாக்குமென்ட் தயாரிப்பாளர் விக்கி ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் துறைமுகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

The post சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chennai port ,Thiruvotiyur ,Chennai ,Mayilapur ,
× RELATED சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசில் மேலும் ஒரு புகார்..!!