×

வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம்: திருமங்கலத்தில் வங்கிக்கடனை கட்ட முடியாமல் ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஆட்டோ டிரைவர், மனைவி, மகன், இரட்டை குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஊராண்டஉரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பால்பாண்டி(39). ஆட்டோ டிரைவர். மனைவி சிவஜோதி(36). மகன் ஜனார்த்தனன்(16). மகள்கள் தர்ஷிகா(12), தர்ஷணா(12). இருவரும் இரட்டை குழந்தைகள்.

குழந்தைகள் கரடிக்கல்லில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். பால்பாண்டி தனது மனைவியின் பெயரில் திருமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.8 லட்சம், மற்றொரு வங்கியில் ரூ.2.40 லட்சம் கடனாக வாங்கி ஊறுகாய் கம்பெனியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவங்கினார். ஊறுகாய் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. மேலும், ரூ.2.40 லட்சம் கடன் வாங்கிய தனியார் வங்கிக்கு முறையாக வட்டி செலுத்தவில்லை. இதனால் வங்கி நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்கள் கடந்த சில தினங்களாக வந்து பால்பாண்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

கடந்த 10ம் தேதி வங்கி ஊழியர்கள் பால்பாண்டியின் வீட்டிற்கு வந்து மிரட்டல் தொனியில் பேசி சென்றுள்ளனர். மேலும் 16ம் தேதிக்குள் பணத்தினை செலுத்தவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்போனில் வங்கி அதிகாரிகள் பேசியுள்ளனர்.  இதனால் மனஉளைச்சலில் இருந்த பால்பாண்டி நேற்று முன்தினம் இரவு சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட்டு மனைவி, குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் அனைவரும் தூங்கச் சென்றனர்.

நேற்று காலை 6 மணியளவில் இரட்டை குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால் மனம் மாறிய பால்பாண்டி, ஆட்டோவில் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மகள் தொடர்ந்து வாந்தி எடுப்பதாக கூறவே, டாக்டர் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக வாந்தி எடுக்கத் தொடங்கினர்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், பால்பாண்டி, மனைவி சிவஜோதியிடம் விசாரிக்கவே, இருவரும் குடும்பமே விஷம் குடித்த தகவலை கூறியுள்ளனர். இதனால் 5 பேருக்கும் முதல் கட்ட சிகிச்சை அளித்து, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 5 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார், மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து 5 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Thirumangalam ,Madurai District, Urandaurapanur village ,
× RELATED மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள்...