×

ஹேமா கமிட்டி அறிக்கையால் புயல்; மலையாள நடிகர்கள் சங்கத்தில் பிளவா?.. வாக்குமூலம் கொடுத்த நடிகைகளிடம் விரைவில் விசாரணை


திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டி அறிக்கையால் ஏற்கனவே மலையாள நடிகர்கள் சங்கம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நடிகர்கள் புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்த நடிகைகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையால் ஏற்பட்ட புயல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்தக் கமிட்டியின் முன் வாக்குமூலம் கொடுத்த நடிகைகள் குறித்த விவரங்களோ, அவர்கள் யார் மீது புகார் கொடுத்தார்கள் என்பது குறித்த விவரங்களோ இன்னும் வெளியே வரவில்லை. ஆனாலும் முன்னணி நடிகர்களான சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, நிவின் பாலி, இடைவேளை பாபு, மணியன் பிள்ளை ராஜு, டைரக்டர்கள் உள்பட சினிமா துறையினர் மீது சில ஜூனியர் நடிகைகள் போலீசில் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான ஒரு சில நாளிலேயே மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த 2 மாதங்களில் பொதுக்குழு கூடி தேர்தல் நடத்தப்படும், அதன் பிறகு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் முன்னாள் தலைவர் மோகன்லால் கூறினார். நடிகர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை வழங்குவதற்காக நடிகர்கள் சங்க நடவடிக்கைகள் வழக்கம்போல தொடரும் என்றும் மோகன்லால் கூறினார். இதற்கிடையே மலையாள நடிகர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நடிகர்கள் புதிய சங்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கமான பெப்கா நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மோகன்லால் உள்பட முன்னணி நடிகர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கிடையே ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஹேமா கமிட்டி முன்பு வாக்குமூலம் கொடுத்த நடிகைகளிடம் விரைவில் விசாரணை நடத்த இந்த குழு தீர்மானித்துள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஹேமா கமிட்டி அறிக்கையால் புயல்; மலையாள நடிகர்கள் சங்கத்தில் பிளவா?.. வாக்குமூலம் கொடுத்த நடிகைகளிடம் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Hema Committee ,Malayalam Actors Association ,Thiruvananthapuram ,
× RELATED ஹேமா கமிட்டி அறிக்கையால் புயல் மலையாள...