×

திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித்தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் 3,238 வகுப்பறைகள், 21 அறிவியல் ஆய்வகங்கள், உள்கட்டமைப்புகள் மேம்பாடு (Infrastructure Facility), ரூ.551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Class Rooms), ரூ.436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-tech Labs), 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பயனடையும் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பிற மாநிலங்களின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பாராடியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும். தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள். ஆய்வகங்கள். கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் 2022 2023ஆம் நிதியாண்டில் நபார்டு கடனுதவித் திட்டம் RIDF XXVIII-ன் கீழ் ரூ.813 கோடி செலவில் 418 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள், 51 ஆய்வகங்கள், 10 மாணவ/மாணவிகள் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023-24-ம் நிதியாண்டில் 173 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.215.76 கோடி செலவில் 844 கூடுதல் வகுப்பறைகள் 21 அறிவியல் ஆய்வகங்கள் 184 கழிப்பறைகள் மற்றும் 700 மீட்டர் சுற்றுசுவர் ஏற்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்கு 23 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.58.61/- கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. 2024-2025ம் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.745.27/- இலட்சம் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான கருத்துரு நபார்டு வங்கியின் ஒப்புலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

2022 முதல் 2024 வரை ஒப்பளிக்கப்பட்ட 614 பள்ளிகளுக்கு ரூ.1,086/- கோடி செலவில் உட்கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிறுவப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் முக்கியமாக மதிப்பீடு, பயிற்சி மற்றும் மொழி ஆய்வக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கான டிஜிட்டல் உள்ளடக்க மதிப்பீடுகளை வழங்குவதற்கும் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கான திறனை வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

2021-2024 ஆம் ஆண்டில் பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவை கழகம் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் ரூ.394.89 கோடியில் 8209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்கான பணி ஆணைகள் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 2024-25 ஆம் ஆண்டில், 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவ ரூ.41.856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* திறன்மிகு வகுப்பறைகள்

மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையை எளிதாக்குவதற்கு திறன்மிகு வகுப்பறைகள் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் ஆடியோ மற்றும் வீடியோவைப் பார்க்கவும் கேட்கவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்கும்போது பாடப் பொருட்கள் மற்றும் பாடநூல் தொடர்பான கூறுகளை விரைவாகப் புரிந்துகொள்வார்கள். இது எதிர்காலக் குறிப்புக்காக, அத்துடன் உரைகள். புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவல்களை பெற்று பாடப் பொருள்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும் பெற்ற தகவல்களை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

2021-22ஆம் ஆண்டில் 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.20.76 கோடியும், 2022-23ஆம் ஆண்டில் 12,500 தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.230 கோடியும், 2023-24ஆம் ஆண்டில் 7500 தொடக்கப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.150 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 20,865 அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

2024-25 ஆம் ஆண்டில், 6,179 அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் அமைத்திட ரூ.117.401 கோடி மற்றும் ரூ. 1,750 அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்க ரூ.33,250 கோடி அனுமதிக்கப்பட்டது. 2021-22 முதல் 2024-25 வரை 28,794 பள்ளிகளில் 551.411 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரைத் திருநகரில் தொடங்கிவைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊராகிய திருக்குவளையில் 25.8.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள், 15.7.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தினர்.

* காடு, மலைப்பகுதி குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதி

காட்டுப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் பள்ளிகளுக்குச் சென்று வருகின்ற குழந்தைகளுக்கு ஆபத்தான பல சிரமங்கள் உள்ளன. அந்தச் சிரமங்கள் அனைத்தையும் நீக்கிட முதலமைச்சர் அவர்கள் சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். 2023-24 ஆம் ஆண்டில் தொலைதூர, அடர்ந்த காடு, மலைப் பகுதிகளில் உள்ள 1692 குடியிருப்புகளைச் சேர்ந்த தொடக்கநிலை முதல் உயர்நிலை வரையில் படிக்கும் 27,707 மாணவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்றுவர போக்குவரத்து பாதுகாவலர்களுடன் வசதிகளையும் ஏற்படுத்தினார்கள். இதனால், குழந்தைகள் அச்சமில்லாமல் பள்ளிகளுக்கு வந்து பயில்வது அப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

* மாற்றுத் திறன் மாணவர்களுக்குத் தனி கவனம்

முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கல்வி நலனில் ஆசிரியர்கள் மனிதாபிமானத்துடன் தனி கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களை உறுதிசெய்யும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மாணவர் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு போன்ற கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணும் வகையில் “நலம்நாடி” என்னும் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* ஆசிரியர்கள் நியமனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏழை, எளிய மக்களும் நாடும் அரசுப் பள்ளிகளின் கல்விப் பணிகள் தடையின்றிச் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு வழங்கியுள்ள அறிவுரைகள்படி 4,989 இடைநிலை ஆசிரியர்கள் 5.154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்களுக்கான மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கற்பித்தல் பணி தடையின்றி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 76 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

* இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள்

முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்பத் தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் 101 கோடியே 48 இலட்சம் ரூபாய்ச் செலவில் கைக் கணினிகள் (Tablet) வழங்க ஆவன செய்துள்ளார்கள்.

* நான் முதல்வன் திட்டம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 9-12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, ஏறத்தாழ 10 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

* “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு”

“தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு” மூலம் 11-ஆம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.

* மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள்

கிராமப்புற மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்து செல்வதற்கு வசதியாக 3,44,144 பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ரூ.165.84 கோடி செலவில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

* புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப்பெண்” திட்டம், அதேபோல மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டம் ஆகியவற்றில் ஏறத்தாழ 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் பயன் பெறுகின்றனர்.

* ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரின் பாராட்டு

புதுதில்லியில் 13.8.2024 அன்று ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலில் (National Institute of Ranking Framework- NIRF) இடம் பெற்றுள்ள செய்திகள் தமிழ்நாட்டின் பெருமையை மேலும்மேலும் உயர்த்தியுள்ளன.

அதாவது, தேசிய அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லியில் 88 கல்லூரிகள், மகாராஷ்டிரத்தில் 80 கல்லூரிகள், கர்நாடாகாவில் 78 கல்லூரிகள், உத்திரப்பிரதேசத்தில் 71 கல்லூரிகள், அசாம் மாநிலத்தில் 15 கல்லூரிகள், மத்தியப் பிரதேசம், சண்டிகர், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் எனத் தரவரிசைப்படுத்தப்பட்டு உயர்கல்வியில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவுத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

The post திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித்தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Dravita Model Government ,Government of Tamil Nadu ,Chennai ,Chief Minister of ,M. K. ,Stalin ,Dravitha Model Government ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு...