×

ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.81 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பணிகள் தீவிரம்: கலெக்டர் ஆய்வு

ஊட்டி: கோடை சீசன் சமயங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஊட்டி நகருக்குள் வராமல் லவ்டேல் சந்திப்பில் இருந்து பிங்கர்போஸ்ட் வழியாக கூடலூர் செல்லும் வகையில் ரூ.81 கோடியில் புற வழிசாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூரில் இருந்து ஊட்டி, குன்னூர் வழியாக மேட்டுபாளையம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனிடையே, இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். அதனால், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கோடை சீசன் சமயங்களில் குன்னூர் மற்றும் ஊட்டி நகரங்களுக்குள் வாகனங்கள் ஒரே சமயத்தில் வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாக ஊட்டி, கூடலூருக்கு செல்ல வசதியாக குன்னூருக்கு முன்பாக காட்டேரி பகுதியில் இருந்து குந்தா சாலையில் சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திபேட்டை, லவ்டேல் வழியாக ரூ.46 கோடி மதிப்பில் புறவழி சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இச்சாலை பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இதன்மூலம், ஊட்டி மற்றும் கூடலூர் செல்ல கூடிய வாகனங்கள் குன்னூர் நகருக்குள் செல்லாமல் இச்சாலையை பயன்படுத்தி பயணிக்க முடியும். இச்சாலையின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் கோடை காலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் ஊட்டி நகருக்குள் வராமல் மாற்றுப்பாதையாக லவ்டேல் சந்திப்பு, அன்பு அண்ணா காலனி, மஞ்சனகொரை, காந்தல், பிங்கர்போஸ்ட் வழியாக கூடலூர் சாலை செல்வதற்க்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த 12.04.2022 அன்று நிதிநிலை அறிக்கையில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதற்காக ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.81 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள அரசாணை பெறப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில், புறவழி சாலை பணிகள் நிறைவேற்றப்பட உள்ள லவ்டேல் சந்திப்பு, மஞ்சனகொரை உள்ளிட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ் விளக்கமளித்தார்.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் மாற்றுப்பாதை அவசியமாகிறது. எனவே, இம் மாற்றுப்பாதையானது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பன்சிட்டி அருகே பிரிந்து ஊட்டி-கைகாட்டி சாலையில் 2.40 கிமீ தூரமும், பாலாடா-லவ்டேல் சாலை 1.60 கிமீ தூரமும், ஊட்டி, அவலாஞ்சி, குந்தா, தாய்சோலா சாலையில் 0.60 கி.மீ தூரமும், பெர்ன்ஹில் சாலை 0.20 கி.மீ தூரமும், சேரிங்கிராஸ் சவுத்லேக் (வழி) லோயர்பஜார் சாலையில் 0.60 கி.மீ தூரமும் என மொத்தம் 5.40 கி.மீ வழியாக தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் இணைகிறது. நகராட்சி சாலைகளான அண்ணாநகர் முதல் மஞ்சனக்கொரை சாலை 3 கிமீ தூரமும், தீட்டுக்கல் சாலை 1 கிமீ தூரமும், பிரீக்பீல்டு சாலை 1.45 கிமீ என மொத்தம் 5.45 கிமீ என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் சாலையின் மொத்த நீளம் 10.85 கிமீ தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இச்சாலை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சீசன் சமயங்களில் கூடலூர் செல்ல கூடிய வாகனங்கள் இச்சாலை வழியாக திருப்பி விடப்படும். இதன் மூலம் ஊட்டி, குன்னூர் இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வெகுவாக குறையும்’’ என்றனர்.

 

The post ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.81 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பணிகள் தீவிரம்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Lovedale Junction ,Gudalur ,Pinkerpost ,Dinakaran ,
× RELATED ஊட்டி நுந்தளா பகுதியில் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு மாடு