×

பாலியல் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் கேரள திரை பிரபலங்கள்.. நடிகர் ஜெயசூர்யா, எம்எல்ஏ முகேஷ் மீது வழக்கு பாய்ந்தது!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய மேலும் 2 மலையாள நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள திரைத்துறையில் பாலியல் புகார்களில் சிக்கியவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் படப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் திருவனந்தபுரம் கண்டோன்ட்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நடிகையிடம் கொச்சியில் உள்ள இல்லத்தில் எஸ்.ஐ.டி. நேற்று வாக்குமூலம் பெற்றது.

நடிகை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் மீதும் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் கீழ் இதுவரை 3 மலையாள நடிகர்கள் மற்றும் ஒரு இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் கடந்த ஜூலை 1ம் தேதிக்கு முன்பு நடந்ததாக கருதப்படுவதால் பழைய இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க கேரள போலீசார் திட்டமிட்டுள்ளனர். காவல்துறையினர் போதுமான ஆதாரங்களை திரட்டிய பிறகு, புகாருக்கு உள்ளானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், பாலியல் வழக்குகளில் சிக்கிய நடிகர் சித்திக் மற்றும் இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் கைதாக வாய்ப்பு உள்ளது.

The post பாலியல் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் கேரள திரை பிரபலங்கள்.. நடிகர் ஜெயசூர்யா, எம்எல்ஏ முகேஷ் மீது வழக்கு பாய்ந்தது!! appeared first on Dinakaran.

Tags : Jayasuriya ,Mukesh ,Thiruvananthapuram ,Kerala ,MLA ,
× RELATED நடிகர் முகேஷ் எம்எல்ஏவுக்கு எதிராக...