×

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. தேவநாதன் உள்பட 3 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன, விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனம் 150 ஆண்டுகள் பழமையானது. இதனால், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு முதல், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தேவநாதன் யாதவ் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது பணிக்காலத்தில் நிதி நிறுவனம் இயங்கி வந்த பழமையான கட்டிடம் புனரமைக்கப்பட்டது. அப்போது நிதி நிறுவனத்தின் ரகசிய அறையில் முதலீட்டாளர்களின் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து முன்னாள் நிர்வாகிகள் 300 கிலோ தங்கம் வைத்திருந்ததாகவும், அந்த தங்கத்தை தேவநாதன் புனரமைப்பு என்ற பெயரில் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அதேநேரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட போது தேர்தல் செலவுக்காக பல கோடி ரூபாய் ரொக்கம் நிதி நிறுவனத்தில் இருந்து தன்னிச்சையாக எடுத்து செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சரியாக முதிர்வு தொகை மற்றும் வட்டி கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளனர். மேலும், நிதி நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட 144 முதலீட்டாளர்கள் ஒன்றாக சேர்ந்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல நூறு கோடி மோசடி செய்து இருந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான தேவநாதன் யாதவ், அவரது கூட்டாளிகளானகுண சீலன், மகிமைநாதன், சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 14ம் தேதி கைது செய்தனர். மேலும், நிதி நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவுக்கு சொந்தமான 12 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்கம் மற்றும் பல கோடி மோசடி செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. அதனை தொடர்ந்து நிதி நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ் நடத்தி வந்த தனியார் தொலைக்காட்சி அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

பின்னர் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி தேவநாதன் யாதவுக்கு சொந்தமான 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. இதற்கிடையே தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த முதலீட்டாளர்கள் 800க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவில் தேவநாதன் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களின் படி பெரிய அளவில் மோசடி நடந்து இருப்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுநேற்று சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக தேவநாதன், குணசீலன், மகிமை நாதன் ஆகிய 3 பேரிடம் 7 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை நேற்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து தேவநாதன் உள்ளிட்ட 3 பேரும் தனித்தனியாக ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி விசாரணைக்கு வந்தது. அப்போது பணத்தை திருப்பி தர தயார் எனவும் தங்களை ஜாமினில் விடுவிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பி ஆஜரான வழக்கறிஞர், நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரியவிக்கப்பட்டது.

அதே போல் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு, தினமும் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் அவர்களை ஜாமினில் விடுவிக்க கூடாது எனவும் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவநாதன் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madras Special Court ,Devanathan ,Chennai ,Dinakaran ,
× RELATED மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...