×

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு; காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

சேலம், ஜூலை 29: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளுக்கு அருகில் செல்லவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறக்கப்படுவதால் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், தண்டோரா, ஒலிபெருக்கி மூலமும், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து, தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால், காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில், யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது.

மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர் பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், புகைப்படங்கள், செல்பி எடுத்தல், காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்த்தல் போன்ற செயல்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு; காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Cauvery ,Salem ,District Collector ,Brinda Devi ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும்...