×

பெங்களூருவில் வேட்டி அணிந்து வந்த முதியவருக்கு மாலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

பெங்களூரு: பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள ஜி.டி வேர்ல்ட் மாலில் வேட்டி கட்டிக்கொண்டு வந்த விவசாயி தடுத்து நிறுத்தப்பட்டதால் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள ஜி.டி வேர்ல்ட் மாலுக்கு பகீரப்பா(70) என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன் நேற்றுமுன்தினம் வந்தார். அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க அவர்கள் வந்திருந்தனர். ஆனால் வேட்டி கட்டிவந்த காரணத்திற்காக அந்த முதியவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதுதொடர்பாக முதியவரும் அவரது மகன் நாகராஜும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும்கூட, அவரை அனுமதிக்கவில்லை.

இந்த தகவலறிந்த கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் நேற்று ஜி.டி வேர்ல்ட் மால் வாசலில் போராட்டம் நடத்தினர். வேஷ்டி கட்டி வந்ததற்காக விவசாயியை மாலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக மால் நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேட்டி, லுங்கி அணிந்து வந்திருந்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பகீரப்பா, கிராமத்திலிருந்து வேட்டி கட்டிவரும் மக்கள் ஒரு படம் பார்ப்பதற்காக திரும்ப ஊருக்குச் சென்று பேண்ட் அணிந்துகொண்டா வரவா முடியும்? என தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், வேட்டி அணிந்து வந்த விவசாயியை மாலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post பெங்களூருவில் வேட்டி அணிந்து வந்த முதியவருக்கு மாலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,GT World Mall ,Magadi Road, Bengaluru ,Bagheerappa ,
× RELATED ரவுடியுடன் அமர்ந்து டீ குடித்த போட்டோ...