×

என்கவுன்டர் தொடர்பாக யார் மீது சந்தேகம் என்று கூறினால் விசாரிக்க தயார்: அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

புதுக்கோட்டை: என்கவுன்டர் தொடர்பாக அண்ணாமலை ஜோதிடம் பார்த்து யார் மீது சந்தேகம் என்று கூறினால் தமிழ்நாடு அரசு அவர்களை விசாரிக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குற்றவாளிகள் தப்பித்து செல்லும் பொழுது சுட்டு தான் பிடிக்க முடியும். ரவுடிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது.

எப்போதுமே எதிர்க்கட்சியினருக்கு யூகமான சந்தேகமும், புதுமையான சந்தேகமும் வரும் தான். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரை குற்றவாளிகளிடமிருந்து வீடியோ ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இதில் உண்மை குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளில் திருவேங்கடம் தப்பி செல்லும் பொழுது என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலை ஜோதிடம் பார்த்து விட்டு வந்து யார் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறினால் அவர்களையும் விசாரிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

எங்களை பொறுத்தவரை மாயாவதி கட்சி எங்களுக்கு வேண்டிய கட்சிதான். ஆம்ஸ்ட்ராங் எங்களுக்கு எதிரி கிடையாது. எங்களுக்கு தோழமை தான். காவிரி விவகாரத்தில் தற்போது கர்நாடகாவில் மழை நன்றாக பெய்துள்ளதால் அவர்களுக்கு தண்ணீர் தருவதில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. அதை தீர்ப்பாயத்தில் தெரிவித்து உரிய நீரை பெறுவோம்.

இரண்டு மாநிலத்திற்கு இடையே பிரச்னை வரும் பொழுது அதில் ஒன்றிய அரசுதான் தலையிட்டு ஒரு முடிவை காண முடியும். நாங்கள் நேராக பேசுவதற்கு இது பங்காளி பிரச்னையோ, சொத்து பிரச்னையோ அல்ல. தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்று தர வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு தான் உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுக ஓட்டு தங்களுக்கு கிடைக்கும் என பாமக எதிர்பார்த்தது. ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post என்கவுன்டர் தொடர்பாக யார் மீது சந்தேகம் என்று கூறினால் விசாரிக்க தயார்: அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,Pudukottai ,Tamil Nadu government ,Annamalai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்