×

அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தியை புகழ்ந்து போடப்பட்ட தனது பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு!!

சென்னை :ராகுல் காந்தியை புகழ்ந்து போடப்பட்ட தனது பதிவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கினார். கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மக்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். உணவு அருந்திக் கொண்டே கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதில் அளித்தார்.இது அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், இணையதளத்தில் வெளியான இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ராகுல் காந்தியின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று அந்த வீடியோவை பதிவிட்டார். அதில், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, செல்லூர் ராஜு திடீர் புகழாரம் சூட்டி இருந்தார். மேலும்,‘‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி” எனவும் செல்லூர் ராஜு பதிவிட்டு இருந்தார்.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அதிமுக வட்டாரத்திலும் தற்போது பேசப்படும் பொருளாக மாறியது. செல்லூர் ராஜுவின் இதுபோன்ற நடவடிக்கையால், அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் சேருவாரா என்ற பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. காரணம், காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரெதிர் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. தேர்தல் நேரத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து போடப்பட்ட பதிவை தற்போது நீக்கி உள்ளார். ராகுல் காந்தியை புகழ்ந்து கூறிய தனது பதிவு அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதிவை நீக்கியாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தியை புகழ்ந்து போடப்பட்ட தனது பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு!! appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Rahul Gandhi ,Chennai ,Former ,AIADMK ,minister ,Delhi ,
× RELATED எம்பி தேர்தலில் அதிமுக 3ம் இடம் ஏன்?...