×

காதலனுடன் பள்ளி மாணவி மாயம் தாய் சடலத்துடன் உறவினர்கள் மறியல்

மரக்காணம், மே 14: மரக்காணம் அருகே காதலனுடன் மகள் மாயமானதால் மன உளைச்சலில் இருந்த பெண்ணின் தாய் நேற்று தற்கொலை செய்துகொண்டார். மாணவியை கடத்திச் சென்ற மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் நேற்று சடலத்துடன் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காணிமேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(38) விவசாயி. இவரது 17 வயது மகள் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி கடந்த 9ம் தேதி மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சியான மாணவியின் பெற்றோர் எனது மகளை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த கோபி(24) என்பவர் தான் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டார். எனவே, எங்கள் மகளை கண்டுபிடித்து அவரிடமிருந்து மீட்டு கொடுங்கள் என மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால், புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மாணவியின் தாய் வனிதா(35) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மரக்காணம் அரசு மருத்துவமனையில் இருந்த வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, இறந்த வனிதாவின் உடலை மரக்காணம்-திண்டிவனம் சாலையில் உள்ள கந்தாடு கிராமத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மரக்காணம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியை கடத்திய கோபியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டு வனிதாவின் உடலையும் எடுத்து சென்றனர். இந்த போராட்டத்தால் மரக்காணம்-திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post காதலனுடன் பள்ளி மாணவி மாயம் தாய் சடலத்துடன் உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : MARAKANAM ,
× RELATED மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில்...