×

சுட்டெரித்த வெயிலுக்கு இடையே சென்னையில் திடீர் மழை

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடும் வெப்பத்தை கக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இதனிடையே தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதே இல்லை. சிலர் ஊட்டி,கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா சென்று வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

கோடை மழை வருமா..? என தினசரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் தலைநகர் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வழக்கத்தை விட அதிகமாக வீசி வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் விமான நிலையம், அடையார், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆயிரம் விளக்கு, நந்தனம் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது. ஆனால் 15 நிமிடங்கள் மட்டுமே மழை நீடித்தது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

The post சுட்டெரித்த வெயிலுக்கு இடையே சென்னையில் திடீர் மழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kathri ,Tamil Nadu ,
× RELATED இனி ஜில்லுனு ஓட்டலாம்; பஸ்சில் டிரைவர்களுக்கு பேட்டரி மின்விசிறி