×

சித்திரை திருவிழாவில் இன்று மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம்: இரவில் தசாவதாரம்

மதுரை: சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு அழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி இன்று மதியம் நடக்கிறது. இரவில், தசாவதாரம் நடக்கிறது. சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கிய சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 22ம் தேதி தேரோட்டம், 23ம் தேதி தீர்த்தவாரியுடன் றைவு பெற்றது.

மதுரை அருகே அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர், கடந்த 21ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டு வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடந்தது. காலை 6.02 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலுக்கு நேற்றிரவு 11 மணியளவில் அழகர் சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்: வீரராகவ பெருமாள் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் அழகர் புறப்பாடாகி மதுரை வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் இன்று காலை எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி பிற்பகல் 2 மணிக்கு நடந்தது. இதற்காக மண்டூக முனிவர், நாரை உருவத்தில் சிலையாக வைக்கப்பட்டிருந்தார். அவர் சாபவிமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்க விடப்பட்டது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு அனுமார் கோயிலில் அழகர் எழுந்தருளுகிறார். அங்கு அங்கப் பிரதட்சணம் நடைபெறும். பின் மேளதாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்புகிறார்.

இரவில் தசாவதாரம்: ராமராயர் மண்டபத்தில் இன்று இரவு 10 மணியளவில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட தசாவதாரங்களில் அழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். முன்னதாக வழியில் சதாசிவ நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை (ஏப்.25) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதியுலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருளுகிறார்.

26ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். 27ம் தேதி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணி இருப்பிடம் சென்று அடைகிறார். 28ம் தேதி உற்சவ சாந்தியுடன் அழகர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

The post சித்திரை திருவிழாவில் இன்று மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம்: இரவில் தசாவதாரம் appeared first on Dinakaran.

Tags : Chitrai Festival ,Alaghar Sapa Vimosana ,Sage Manduka ,Dasavathara ,Madurai ,Saiva ,Vaishnava ,Meenakshi ,Amman Koil ,Alaghar ,Chitrai festival: ,Dasavatharam ,
× RELATED கம்பத்தில் சித்திரை திருவிழா மஞ்சள் நீராட்டம்