×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராஜேஷ் தாஸ் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் சரணடைவதில் இருந்து விலக்குகோரியும் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

2021-ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16-ல் தீர்ப்பளித்தது. மேலும், பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில், அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து இருவரும் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த பிப்.1-ம் தேதி முதல் ராஜேஷ்தாஸ் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தனது தரப்பில் தானே வாதாட அனுமதிக்குமாறு கோரினார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, பிப்.7-ம் தேதி வரை வாதாடி, தனது வாதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் அரசு தரப்பு வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து, பிப்.12-ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பூர்ணிமா அறிவித்தார். அதன்படி, நேற்று நீதிமன்றம் கூடியதும், 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு, கீழமை நீதிமன்றமான தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ்தாஸ் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு அளித்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. மனுவை விசாரித்த நீதிபதி தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ராஜேஸ்தாஸை சரணடைய உத்தரவிட்டார்.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Rajesh Das ,Chennai ,iCourt ,Special ,DGP ,Dinakaran ,
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...